வாஜ்பாயின் வலதுகரம்.. மூத்த பாஜக தலைவர் அத்வானிக்கு .. பாரத ரத்னா விருது!

Su.tha Arivalagan
Feb 03, 2024,06:35 PM IST

டெல்லி: மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயின் வலதுகரமாக திகழ்ந்தவரும், பாஜகவை நிறுவிய தலைவர்களில் ஒருவருமான, முன்னாள் துணைப் பிரதமரும், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தியவருமான 96 வயதான லால் கிஷன் அத்வானிக்கு பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அத்வானிக்கு அறிவிக்கப்பட்டிருப்பதை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் அத்வானியைத் தொடர்பு கொண்டு தெரிவித்து  வாழ்த்தினார்.




இதுகுறித்து பிரதமர் மோடி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், எல்.கே.அத்வானிக்கு பாரதரத்னா விருது அளிக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். அவரிடம் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தேன். நமது காலத்தில் நாம் மதித்த மிகப் பெரிய அரசியல் ஆளுமையான தலைவர்களில் அவரும் ஒருவர். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகள் மிகப் பெரியவை.


அடித்தட்டிலிருந்து பணியாற்றத் தொடங்கி, துணைப் பிரதமர் பதவி வரை உயர்ந்தவர் அத்வானி. நமது நாட்டின் உள்துறை அமைச்சராக, செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டவர் அத்வானி. அவரது நாடாளுமன்ற பேச்சுக்கள் என்றென்றைக்கும் மறக்க முடியாதவை என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.


அத்வானியின் பல ஆண்டுகால பது வாழ்க்கையில் அவரது செயல்பாடுகள் மிக மிக வெளிப்படையாக, அர்ப்பணிப்புடன் இருந்தன. அரசியல் தார்மீக நெறிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் அவர். நாட்டின் ஒற்றுமை மற்றும் கலாச்சார எழுச்சியை மேலும் பலப்படுத்தியவர் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா கொடுப்பது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது.  அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.


துணைப் பிரதமர் 




வாஜ்பாயும், அத்வானியும் சங் பரிவாரின் ஆரம்ப காலத்திலிருந்து இணைந்து பணியாற்றியவர்கள். பாஜகவை உருவாக்கிய தரைவர்களில் இவர்களும் அடக்கம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது துணைப் பிரதமராக இருந்தவர் அத்வானி. பாஜகவின் இரட்டைக் குழல் துப்பாக்கி போல இருவரும் செயல்பட்டனர்.


உள்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளையும் அத்வானி வகித்துள்ளார். லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் அவர் எம்.பியாக பதவி வகித்துள்ளார். லோக்சபாவைப் பொறுத்தவரை குஜராத் மாநிலத்திலிருந்துதான் அவர் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1970 முதல் 2019ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக எம்.பியாக இருந்துள்ளார் அத்வானி.


அயோத்தி ரத யாத்திரை




அயோத்தியில் ராமர் கோவில் கட்டக் கோரி, அத்வானி வட மாநிலங்களில் மிகப் பெரிய ரத யாத்திரையை நடத்தினார். இந்த யாத்திரை அயோத்திக்குள் நுழையும்போதுதான் அங்கு மிகப் பெரிய கலவரம் வெடித்தது. பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 


அத்வானி நடத்திய ரத யாத்திரைதான் பாஜகவுக்கு வட மாநிலங்களில் மிகப் பெரிய அளவுக்கு செல்வாக்கை அதிகரிக்க உதவியது. இந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் தற்போது, அந்தக் கோவிலுக்காக ரத யாத்திரை நடத்தி வட மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கை உயர்த்திய அத்வானிக்கு தற்போது பாரத ரத்னா விருது அளிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில்தான் பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கற்பூரி தாக்கூருக்கு கடந்த மாதம் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அவர் மறைந்து 35 வருடங்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.