டீச்சர் மேல் ஈர்ப்பு.. அதில் தாய்மை மிளிர்கிறது.. செல்வம் அரசுப் பள்ளி ஆசிரியரின் வாழை Review

Su.tha Arivalagan
Aug 27, 2024,06:50 PM IST

சென்னை: எங்கு பார்த்தாலும் வாழை படம் குறித்த பேச்சாகவே இருக்கிறது. படம் வெளியாகி சில நாட்களாகி விட்டாலும் கூட படம் குறித்த பேச்சுக்கள் இன்னும் குறையவில்லை. 


இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகியுள்ள, அவரது சொந்தக் கதைதான் வாழை. இப்படத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள், கதைச் சூழல், வாழ்வியல் என எல்லாமே பேசு பொருளாகியுள்ளன. ஏன் பூங்கொடி டீச்சரும் கூட பேசப்படுகிறார்.




இப்படம் குறித்து பிரபல எக்ஸ் தள பதிவாளரும், அரசுப் பள்ளி ஆசிரியருமான வேதாரண்யத்தைச் சேர்ந்த செல்வம் ஒரு அழகான விமர்சனத்தை நறுக்கென நாலு வரிகளில் சொல்லியுள்ளார். அதையும் படிங்க:


எங்கள் ஊர் பக்கம் எந்த தியேட்டரிலும் வாழை ரிலீஸ் ஆகவில்லை. சிவகாசி ஒரு வேலையாக சென்றிருந்தேன். எனவே  விருதுநகர் ஸ்ரீராம் சினிமாவில் இரவு இரண்டாவது ஷோ ஆன் லைன் டிக்கெட் புக் செய்து நண்பர்களுடன் காரில் சென்றோம். நல்ல தியேட்டர் ஆனால் சின்ன சந்திற்குள் வைத்துள்ளார்கள். டூவிலர்கள் தெரு முழுவதும் ட்ராஃபிக்கில் சிக்கி சின்னாபின்னமாகி 10.45 போய் சேர்ந்தோம். ஆனால் 11 மணிக்கு படம் போட்டார்கள். ஹவுஸ் புல் காட்சி... எதிர்பார்த்தது போலவே படம் அருமை.


கால் படி நெல் கூலி உயர்வு கேட்டதால் கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை நிகழ்வு இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 வேளாண் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதைப்போல ஒரு வாழைத்தார் சுமக்க ஒரு ரூபாய் கூலி உயர்வு கேட்டதால் 19 பேர் எப்படி இறக்கிறார்கள் என்ற உண்மை சம்பவத்தை வைத்து சிறப்பான படத்தை தந்துள்ளார். உழைப்புச் சுரண்டல் குறித்தும், அதன் வர்க்கத் தன்மை குறித்தும் சினிமா மொழியில் கூறி உள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.


நிறையபேர் கூறுவது போல இது மொத்தமும் அழுகை படமல்ல. வாய்விட்டு சிரிக்க ரசிக்க நிறைய காட்சிகள் வைத்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையை நிறைய பேர் புகழ்கிறார்கள். என்னை பொருத்தவரை இந்த படத்திற்கு அவருடைய இசை பொருந்தி போகவில்லை என்றே எண்ணுகிறேன். இன்னும் புதிய இரண்டு நாட்டுப்புற பாடல்களை சேர்த்திருக்கலாம். 


தூதுவள எல அரைச்சி பாட்டிற்கு கிளாப்ஸ் அள்ளுகிறது. அது போல பஞ்சு மிட்டாய் சேல கட்டி பாடலுக்கு தியேட்டரே ஆடுகிறது.

டீச்சர் மேல் சிவணைந்தனின் ஈர்ப்பு, நேத்து எங்க அம்மா போல அழகா இருந்திங்க இன்னைக்கு எங்க அக்கா போல அழகா இருக்கிங்க என்று சொல்லும் போது அந்த ஈர்ப்பில் ஒரு தாய்மை மிளிர்கிறது. வாழ்த்துக்கள்  மாரி செல்வராஜ் சகோ. 


காதாநாயக பிம்பத்தால் தமிழ் சினிமா கீழ் நோக்கி போய்க்கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற படங்கள் நிச்சயமாக வரவேற்க‌ வேண்டியவையே... என்று எழுதியுள்ளார் செல்வம் அரசுப் பள்ளி ஆசிரியர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்