ஒரு காலத்தில் திருமாவளவனின் வலதுகரம்.. இன்று தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர்.. செல்வப்பெருந்தகை!

Su.tha Arivalagan
Feb 17, 2024,10:22 PM IST

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மிகப் பெரிய முக்கியத் தலைவராக ஒரு காலத்தில் விளங்கியவர் கு. செல்வப்பெருந்தகை.. இன்று தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்குக் கிடைத்துள்ள புதிய பெருமையாக அமைந்துள்ளது.


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது முதல் முறையல்ல என்றாலும் கூட செல்வப்பெருந்தகையின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.


வட தமிழ்நாட்டின் முக்கிய  தலித் தலைவர்களில் ஒருவர்தான் செல்வப்பெருந்தகை. பூவை ஜெகன் தொடங்கிய புரட்சி பாரதம் கட்சியில் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். இக்கட்சியில் இருந்தபோது 2006ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபைக்கு முதல் முறையாகப்  போனார். அதன் பிறகு செங்கம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் 2 முறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.




விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனின் வலது கரமாகவே செயல்பட்டு வந்தார் செல்வப் பெருந்தகை. அப்போது அவரது பெயர் வெறும் செல்வம்தான். பின்னர்தான் தனது பெயரை செல்வப் பெருந்தகை என்று மாற்றிக் கொண்டார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அரசியல் சக்தியாக மாற்ற திருமாவளவன் கடுமையாக போராடிக் கொண்டிருந்தபோது அவருக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தவர் செல்வப்பெருந்தகை. அதன் பின்னர் திருமாவுடன் மனக் கசப்பு ஏற்படவே, செல்வப்பெருந்தகை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செட் ஆகவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸில் பயணித்து வரும் அவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.