அன்று ராகுல்.. இன்று மோடி குறித்த விமர்சன வீடியோ.. மீண்டும் பரபரப்பைக் கிளப்பிய செல்லூர் ராஜு

Su.tha Arivalagan
Jun 10, 2024,05:32 PM IST

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளார். முன்பு காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியைப் பாராட்டி டிவீட் போட்டிருந்த செல்லூர் ராஜு தற்போது பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.


அதிமுகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவர் செல்லூர் ராஜு. அதிமுக - பாஜக இடையிலான மோதலின் போது தொடர்ந்து பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வந்தவர். பாஜக தலைவர்களின் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்தும் வந்தார்.




லோக்சபா தேர்தல் சமயத்தின்போது திடீரென ராகுல் காந்தியைப் பாராட்டி ஒரு டிவீட் போட்டு அதிரடியைக் கொடுத்தார். இது அதிமுக வட்டாரத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி மேலிடம் இதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தனது எக்ஸ் தள பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு.


இந்த நிலையில் தற்போது இன்னொரு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். ஒரு பெண் பிரதமர் மோடி அரசை விமர்சித்துப் பேசும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி MP கள் குரல் எழுப்புவார்களா? பார்ப்போம்  என்று கருத்தைப் பதிவு செய்துள்ளார் செல்லூர் ராஜு.


அந்த வீடியோவில் பேசும் பெண் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் மோடி அரசு துரோகம் செய்தது குறித்து அடுக்கடுக்காக பல விவரங்களைக் கூறி விளக்கிப் பேசியுள்ளார். இந்த வீடியோவைத்தான் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.


இந்த வீடியோ புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த டிவீட்டுக்கு பாஜகவினர் வந்து பதிலடி கொடுத்துக் கொண்டுள்ளனர். திமுகவினரோ, பாஜகவை விமர்சித்து வருகின்றனர். ஆக மொத்தம் செல்லூரா் ராஜுவின் இந்த ஒற்றை டிவீட்டால் புதிதாக ஒரு புயல் கிளம்பியுள்ளது. இந்த டிவீட்டையாவது வைத்திருப்பாரா அல்லது டெலிட் செய்வாரா என்று தெரியவில்லை.