சிறகொடிந்து கிடக்கின்றேன்!

Su.tha Arivalagan
May 07, 2023,10:50 AM IST
- கவிஞர் சீதாலெக்ஷ்மி

சிலிர்த்துக் கிடக்கிறது வானம்
சிலுசிலுவென்று தொட்டுப் போகிறது தென்றல்
முகிழ்த்துக் கிளம்பும் மெல்லொலியில்
சடசடவென்று  படபடக்கின்றன சருகுகள்
நானோ
சிறகொடிந்து கிடக்கின்றேன்
நீ இல்லா இந்த நேரம்
எதுவும் இல்லாத வெறுமையாய்!

வருடித் தரும்
வசந்த கால காற்றாய் வந்தாய்
உன் தொடுதலில்
காய்ந்து உலர்ந்த சருகாய் இருந்த எனக்கு 
சிறகுகள் முளைத்தன.....!!

ஆர்ப்பரிக்கும் வெள்ளமாய் 
உள்ளுக்குள் சீறி பாய்ந்தாய்
அத்தனை கதவுகளும் திறந்து
அடங்காத காட்டாறாய் மாறிப் போனேன்




கார்மேகம் கசிந்து பொழிந்து
துள்ளி குதித்தெறித்த திவலையில்
என்றோ தின்று எறிந்த வித்து ஒன்று
புதையுண்ட ஆழ் நிலத்திலிருந்து
துளிர்விட்டு நிமிர்ந்து நிற்பதுபோல ..
மழைத்துளியாய் விழுந்தாய் 
துளிர்த்து கொழுந்தாய் தளர்ந்தேன்.. துவண்டேன்.. துடித்தேன்.. பின் நிமிர்ந்தேன்!

ஆகாயமாய் சூழ்ந்தாய்
அனலியாக அம்புலியாக  
அடைக்கலம் 
புகுந்தேன்......!!

ஆண் விதவை....!!


இருளாய் வந்தாய்
விண்மீனாய்
ஜொலித்து ஒளிர்ந்து மிளிர்ந்தேன்!

இரும்புக்கூண்டில் அடைந்திடாத நான் 
உன்
இதயக்கூண்டில் அடைந்திட ஆசை கொண்டேன் ......!!

பசை போல் ஒட்டியிருந்த என்னில் 
எங்கிருந்தோ வந்து விழுந்த
அந்த 
ஒரு பொட்டுத் துளி பட்டு.. சட்டென்று பிய்ந்து போனாய்... பிரிந்து போனாய்!

இக்கணம் நீ இல்லா இந்த நேரம் 
சிறகொடிந்து கிடக்கின்றேன்
மனமிழந்து தவிக்கிறேன்

சில மௌனங்கள் ....!!


வானம் பார்த்த பூமியாய்
வாசம் கேட்கும் பூவாய்
கூடு தேடும் தேனீயாய்
கோதக் காத்திருக்கும் கூந்தலாய்
அள்ளி பருக ஆர்ப்பரிக்கும் குளத்து நீராய்
காத்திருக்கும் நான்
காத்திருப்பதும் தவம் தானே
ஆனால்
நீ வருவாயா?