"சாமியார் தலைக்கு  ரூ. 100 கோடி".. உதயநிதிக்கு ஆதரவாக திரும்பிய சீமான்!

Su.tha Arivalagan
Sep 06, 2023,03:32 PM IST
சென்னை: சூட்டோடு சூடாக திமுகவுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாக திரும்பியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்துப் பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் கடும் விவாதப் பொருளாகியுள்ளது. அவருக்கு எதிர்ப்புகள் எந்த அளவுக்கு வருகிறதோ அதே அளவுக்கு ஆதரவும் குவிகிறது. இதனால் சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் எல்லாம் படு சூடாக காணப்படுகின்றன.



இந்த விவாதத்திற்கு தற்போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் புது பரபரப்பைக் கூட்டியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக் கொண்டு வருவோருக்கு ரூ. 10 கோடி தருவேன் என்று அயோத்தி பரமஹம்ச சாமியார் அறிவித்து அதிர வைத்தார் இல்லையா.. தற்போது அந்த சாமியார் தலைக்கு சீமான் ரூ. 100 கோடி விலை வைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அயோத்தி சாமியார்  தலைக்கு விலை வைத்திருப்பது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், சாமியார் என்றால் சாந்தம். இந்த சாமியார் தலையை வெட்டுவேன் என்று கூறியிருப்பதெல்லாம் வேடிக்கையானது. நான் ரூ. 100 கோடி தர்றேன்.. அவர் தலையை  வெட்டுங்க.. அதெல்லாம் தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொல்பவர்கள் எல்லாம் சாமியாரே கிடையாது. ரவுடி, பொறுக்கி, கசாப்புக் கடைக்காரர்.

ஒரு கருத்தை கருத்தால்தான் வெல்ல வேண்டும். கருத்துடன் கருத்துதான் மோத வேண்டும். தம்பி உதயநிதி ஸ்டாலின் சொன்னது சரியில்லை என்று கருதினால் சரியானது எது என்பதை வாதமாக எடுத்து வைக்க வேண்டும். அதை விட்டு விட்டு தலையை கொண்டு வா என்று பேசுவதெல்லாம் சரியான பேச்சு கிடையாது.  

பிறப்பையும், தொழிலையும் வைத்து பேதம் பார்ப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விட மாட்டேன், பயப்படவும் மாட்டேன் என்று கூறினார் சீமான்.