"ஒண்டிக்கு ஒண்டி நிக்கணும்.. சிங்கமா நிக்கணும்".. அண்ணமலைக்கு.. தொடை தட்டி சவால் விட்ட சீமான்!

Meenakshi
May 24, 2024,05:14 PM IST

சென்னை: தனியா போட்டியிடுங்க.. சிங்கம் மாதிரி தனிச்சு வாங்க.  எங்க கட்சியை விட பாஜக வாக்குகள் அதிகமாக இருந்தால் உடனே கட்சியை கலைச்சுர்றேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விட்டுள்ளார்.


இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது ஆவேசமாக பேசினார் சீமான். அவரது பேட்டியிலிருந்து:


முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கேரள அரசு கட்டக்கூடாது. அணை பலவீனமாக இருக்கிறதெனில் இரு மாநில அரசுகளின் ஒப்புதலோடு, நிதி பங்கீட்டுடன் அணைகளுக்குள் ஓர் அணை கட்டலாமே?  அதை விடுத்து ஏன் இடித்து கட்ட வேண்டும்? எனவே, முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணைக்கட்டுவதை ஏற்க முடியாது.




என் மண் என் மக்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடந்தாரே, இப்போது உள்துறை அமைச்சர் பேச்சுக்கு அவர் என்ன சொல்ல போகிறார்?  ஒரு தமிழராக அவரது நிலைப்பாடு என்ன? தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என அண்ணாமலை கூறி இருக்கிறார். முதலில் அவர் தனித்து நின்று போட்டியிட்டு காட்டட்டும். பிரதமர் மோடி ராமர் ராமர் என்று சொல்லிப் பார்த்தார். எடுபடவில்லை.  எனவே, தற்போது தன்னையே ராமர் என்று சொல்லிவிட்டார். அவர் கோயில் கட்டவில்லை. தனக்காக வீடு கட்டிக் கொண்டார்.


ஒடிசாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரையில் தமிழர் ஒருவர் முதல்வராக வருவது குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபி தான் ஆள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். ஆனால் தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என்று சொன்னால் மட்டும் விமர்சிக்கின்றனர். இதை எல்லாம் ஏப்ரல் 19க்கு முன்பாக இவர்கள் பேசி இருக்க வேண்டும் என்றார் சீமான்.


தமிழ்நாட்டில் பாஜகதான் 3வது பெரிய கட்சி என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, முதலில் தனித்துப் போட்டியிட்டடும். கூட்டணியெல்லாம் சேர்க்கக் கூடாது. ஒண்டிக்கு ஒண்டி நிக்கணும், சிங்கமா நிக்கணும்.. கூட்டணி இல்லாம பாஜக தனித்து பெற்ற வாக்குகள், நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இருந்தது என்றால் நான் கட்சியை கலைத்து விட்டு சென்று விடுகிறேன். அதன்பின் யார் 3வது பெரிய கட்சி என்று தெரிந்துவிடும் என்றார் சீமான்.