15 சீட்டும் ரூ.1000 கோடியும் தருவதாக கூப்பிட்டாங்க.. நான் போகலியே... சீமான்

Meenakshi
Apr 12, 2024,02:29 PM IST

நாமக்கல்: 15 சீட்டு தர்றோம், 2026 நீங்கள் தான் முதலமைச்சர், ஆயிரம் கோடி ரூபாய் பணம் தருவதாக சொல்லிக் கூப்பிட்டார்கள். குடும்பத்துக்கு தனியாக பணம். கட்சிக்கு தனியாக நிதி தருகிறோம் என்றார்கள். தெருக்கோடியில் கூட நிற்பேன். ஆனால் உங்களோடு வர மாட்டேன் என்று மறுத்துவிட்டேன் என்று சீமான் கூறியுள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் எப்படியாவது வென்று வெற்றி வாகை சூட வேண்டும் என்று  தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். நாமக்கல் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரமத்தி வேலூரில் சீமான் பேசுகையில்,


மக்கள் மீதான அக்கறையில் தான் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்கிறோம். 15 ஆண்டுகாலமாக களத்தில் போராடும் எங்களுக்கு என்ன கொடுத்தீர்கள்.ஒரு கவுன்சிலர், ஒரு எம்எல்ஏ, எம்பி ஒரு இழவும் கொடுக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் நாங்கள்  கொடுக்கிறோம் என கூட்டணிக்கு அழைத்தார்கள். அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட்டு எங்களை ரோட்டில் போட்டது தான் மிச்சம்.



15 சீட்டு, 2026 நீங்கள் தான் முதலமைச்சர், ஆயிரம் கோடி ரூபாய் பணம் தருவதாக சொல்லிக் கூப்பிட்டார்கள். குடும்பத்துக்கு தனியாக பணம். கட்சிக்கு தனியாக நிதி தருகிறோம் என்றார்கள். தெருக்கோடியில் கூட நிற்பேன். ஆனால் உங்களோடு வர மாட்டேன் என்று மறுத்தேன். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.


70 ஆண்டுகளுக்கு மேல் ஒரே சின்னம் உதயசூரியன். 60 ஆண்டுகளாக இரட்டை இலை சின்னம். கை சின்னத்தில் காங்கிரஸ். தேசிய மலரான தாமரை சின்னத்தில் பாஜக போட்டி இடுகிறது. என்னுடைய விவசாய சின்னம் எங்கே? அதை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். ஏன் தரவில்லை தெரியுமா? பயம் .. அந்த சின்னத்துடன் சீமான் தேர்தலை சந்திக்க விடக்கூடாது என்ற பயம். திரும்ப திரும்ப மோடி ஓடி ஓடி வருகிறார். ஏன் எப்படியாவது அந்த வாக்குகளை இயந்திரத்திற்குள் வேலையை காட்டி பாஜக வென்று விட்டதாக காட்ட வேண்டும் என்பதற்காக தான் என்று கூறியுள்ளார்.