சம்மன்களை ஒட்டி விட்டுப் போக தனியாக நோட்டீஸ் போர்டு.. சீமான் வீட்டில் புதிய ஏற்பாடு!

Su.tha Arivalagan
Feb 28, 2025,07:51 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட விரும்புவோருக்காக ஒரு நோட்டீஸ் போர்டை வாங்கி வெளியில் வைத்துள்ளனர். கதவில் ஒட்டுவதால், கதவு அழுக்காவதாகவும், அதைக் கிழிக்க முடியாமல் போவதாகவும், கயல்விழி சீமான் விளக்கம் தெரிவித்துள்ளார்.


சீமான் வீட்டில் நேற்று ஒட்டப்பட்ட போலீஸ் சம்மன் கிழிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் அமளி துமளியாகி விட்டது. போலீஸாரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் தடுத்த பாதுகாவலர் அமல்ராஜ், சம்மனைக் கிழித்த சுபாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், தற்போது சீமான் வீட்டுக்கு வெளியே ஒரு புதிய போர்டு வைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்திலான அந்தப் போர்டு, டியூஷன் சென்டர்களில் மார்க்கர் பேனாவால் எழுதுவதற்குப் பயன்படுத்துவோமே அது போன்ற போர்டாகும். இந்த போர்டில்,  சம்மனை ஒட்டுச் சார்வு செய்ய விரும்பும் காவல் அதிகாரிகள் இங்கே ஒட்டிச் செல்லவும் என்று கூறி இரண்டு பக்கமும் கீழ் நோக்கி அம்புக் குறியும் போட்டு வைத்துள்ளனர்.




இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கயல்விழி சீமான் கூறுகையில், நிறைய சம்மன் வருகிறது. இனிமேல் சம்மனை ஒட்ட விரும்பினால் இங்கே ஒட்டி விட்டுச்   செல்லலாம். எவ்வளவு வேண்டுமானாலும் ஒட்டுங்கள். நாங்கள் போர்டை தூக்கிக் கொண்டு போய் உள்ளே கொண்டு வைத்து படித்து விட்டு மீண்டும் இங்கேயே வைத்து விடுகிறோம். 


கதவில் அழுத்தமாக ஒட்டி விடுகிறார்கள். இதனால் அதை கிழிக்க முடியவில்லை. மேலும் கதவும் அழுக்காகி விடுகிறது. சுத்தம் செய்ய முடியவில்லை. எனவேதான் இந்த ஏற்பாடு என்று விளக்கம் அளித்தார்.


சம்மன் ஒட்டுவதற்காகவே தனியாக நோட்டீஸ் போர்டு வைத்த முதல் அரசியல் தலைவர் சீமானாகத்தான் இருப்பார்!