விஜயகாந்த் மாதிரி நடிகர்கள் வரலாம்.. ஆனால் இன்னொரு "மனிதன்" வர முடியாது.. சீமான் உருக்கம்

Su.tha Arivalagan
Dec 29, 2023,07:39 PM IST

தூத்துக்குடி: விஜயகாந்த் மறைவை எப்படிப் பார்த்தாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் போல இன்னொரு நடிகர் வரலாம், கட்சித் தலைவர் வரலாம்.. ஆனால் இன்னொரு மனிதன் வரவே முடியாது. அந்த அளவுக்கு ஆகச் சிறந்த மனிதர் அவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.


தூத்துக்குடி வந்திருந்த சீமான் அங்கிருந்து இன்று காலை சென்னை கிளம்பினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விஜயகாந்த் என்றாலே அச்சமின்மையும் துணிவும்தான் நினைவுக்கு வரும். எதுக்கும் பயப்பட மாட்டார். அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு தவசி படத்தில் கிடைத்தது. அந்தப் படத்துக்கு நான்தான் உரையாடல் எழுதினேன். படப்பிடிப்பு தளத்தில் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 




அவர் மாதிரி நடிக்க, சண்டை போட ஆட்கள் வரலாம்.. ஆனால் மனிதர்கள் வருவது கடிதனம். புகழின் உச்சிக்குப் போன பிறகும் கூட அது அவரது தலையில் ஏறவில்லை. அனைவருடனும் சமமாக பழகும் மனிதர் அவர் மட்டுமே. அவர் என்ன சொன்னாலும் கேட்பார்கள். கமல், ரஜினி யாராக இருந்தாலும் விஜியா.. விஜி சொன்னா சரி என்று அனைவரும் கேட்டனர். காரணம், அவர் அந்த அளவுக்கு எல்லோரையும் நேசித்ததுதான். 


மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை. நல்ல உடல்நலத்துடன் அவர் இருந்திருந்தால் தமிழ்நாட்டு  அரசியல் போக்கே மாறியிருக்கும். முதல் தேர்தலிலேயே 6 சதவீதம், நாடாளுமன்றத் தேர்தலில் 10 சதவீதம் என்று ஏறி வருவதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. அதுவும் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இருந்தபோதே வருவது என்பது பெரிய துணிச்சல்தான்.


யாருக்கும் பயப்பட மாட்டார். கடினமான உழைப்பாளி, பசி பட்டினி தூக்கம் இல்லாமல் வேலை பார்ப்பார்.  3, 4 நாள்  கூட தூங்காமல் வேலை செய்வார். அப்படிப்பட்ட கலைஞர். ஆகச் சிறந்த மனிதர், நல்ல மனிதர் என்று அவரை சாதாரணமாக அடக்கி விட முடியாது, ஆகச் சிறந்த மனிதர் அவர். மிகப் பெரிய பண்பாளர் எளிமையானவர், படப்பிடிப்பில் கூட அவர்கள் கொடுக்கும் பேன்ட் சட்டையைத்தான் போடுவார். மற்ற நேரங்களில் சாதாரண கதர்ச் சட்டை வேட்டிதான். 


மிகவும் இயல்பான மனிதர். திரையில்தான் கம்பீரமாக இருப்பார், ஆனால் உள்ளுக்குள் குழந்தை மனம் கொண்டவர். இயற்கை பேரிடர் போல அவரது மரணமும் பேரிழப்புதான் என்று கூறியுள்ளார் சீமான்.