விசாரிக்கக் காத்திருந்த போலீஸ்.. சீமான் வரவில்லை.. வக்கீல் மூலம் கடிதம்!

Su.tha Arivalagan
Sep 12, 2023,05:08 PM IST

சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் இன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு வரவில்லை.


கடந்த 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது பல்வேறு புகார்களைக் கூறி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் பேரில் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் தாங்கள் சமரசமாக போய் விட்டதாகவும், மேல் நடவடிக்கை தேவையில்லை என்று கூறி விஜயலட்சுமி தெரிவிக்கவே போலீஸ் நடவடிக்கை அத்தோடு நின்று போனது.


இந்தநிலையில் சமீபத்தில் மீண்டும் இந்த விவகாரம் பூகம்பமாக வெடித்தது. சீமான் தன்னை மதுரையில் வைத்துத் திருமணம் செய்து கொண்டதாகவும், இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் நடந்து விட்டதாகவும், பலமுறை தான் கர்ப்பமான நிலையில் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்து விட்டதாகவும் புகார் கூறினார் விஜயலட்சுமி. இதுதொடர்பாக போலீஸிலும் அவர் புகார் கொடுத்தார்.




இந்தப் புகாரின் பேரில் வளசரவக்கம் போலீஸார் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வாக்மூலத்தை கோர்ட் மூலமும் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து விசாரணைக்கு வருமாறு  சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று அவர் விசாரணைக்கு வருவதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் குழு காத்திருந்தது. ஆனால் சீமான் வரவில்லை. மாறாக அவரது வக்கீல்கள்தான் வந்தனர். 


அவர்களிடம் சீமான், தான் விசாரணைக்கு வர முடியாததற்கான காரணத்தை விளக்கி கடிதம் கொடுத்திருந்தார். அந்தக் கடிதத்தை வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்தனர். சீமான் வரப் போவதாக தகவல் வெளியானதால் காவல் நிலையப் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர், பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். இருப்பினும் சீமான் வராததால் அனைவரும் ஏமாற்றமடைந்தனர். போலீஸாரும் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.