நான் வெடித்துச் சிதறினால் ஒருத்தனும் தாங்க மாட்டீங்க.. சீமான் ஆவேசம்

Su.tha Arivalagan
Sep 02, 2023,02:29 PM IST

ஊட்டி: சமூகத்தில் அந்தஸ்துடன் இருக்கும் ஒருவர் மீது போற போக்கில் அவதூறுகளை அள்ளி வீசுவீர்களா.. பொறுத்துப் பார்ப்பேன்.. ஒரு நாள் வெடித்துச் சிதறுவேன்.. அதை ஒருத்தனும் தாங்க மாட்டீங்க என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.


சீமான் தன்னைக் கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார் என்று கூறி வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இந்தப் புகாரை தொடர்ந்து மறுத்து வருகிறார் சீமான். இந்த நிலையில் தற்போது இது உச்சத்தை எட்டியுள்ளது. சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார் விஜயலட்சுமி.


இதையடுத்து விஜயலட்சுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சீமானிடம் கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் சீமான் தனது கோபத்தை வெளிப்படுத்தி பதிலளித்து வருகிறார். பிரஸ் மீட்களில் இதுகுறித்துக் கேட்க ஆரம்பித்தாலே உக்கிரமாகி விடுகிறார். உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா என்றும் செய்தியாளர்களிடம் கோபித்துக் கொள்கிறார்.


அந்த வகையில் ஊட்டிக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் விஜயலட்சுமி விவகாரம் குறித்துக் கேட்டபோது கோபமாகி விட்டார் சீமான். என்னை எத்தனையோ பேர் சந்திக்கிறார்கள். புகைப்படம் எடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது திருமணமாகி விட்டது என்று சொல்கிறார். கல்யாணம் செய்து கொண்டால் போட்டோ எடுத்திருக்க வேண்டுமே.. திருமணத்தை பதிவு செய்திருக்க வேண்டுமே.. அதைக் காட்டச் சொல்லுங்க.


சமூகத்தில் ஒருவன் உயிரைக் கொடுத்து இனத்துக்காக உழைக்கிறான், தொடர்ந்து பாடுபடுகிறேன்.. மக்களுக்காக குரல் கொடுக்கிறான். அவன் மீது போற போக்கில் நீங்க அவதூறுகளை சொல்லிட்டுப் போயிருவீங்களா.. இதை எப்படி இந்த சமூகம் ரசிக்கிறது. 


ஊடகங்கள் குப்பை மேட்டில் இருக்க விரும்பினால் இருந்து கொள்ளட்டும். கக்கூஸில்தான் குடியிருப்போம் என்று விரும்பினால் இருந்து விட்டுப் போகட்டும். என்னிடம் இதெல்லாம் பேசவே பேசாதீங்க.  நான் சொல்லும் கருத்துக்களைக் கேளுங்க, அதை மக்களிடம் கொண்டு போய்  சேருங்க. அதை விட்டு விட்டு இதெல்லாம் ஒரு செய்தியா.. 


13 வருடமாக இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு வர்றேன். வேற வேலையே இல்லையா உங்களுக்கெல்லாம். இது திசை திருப்பும் வேலை. காலையில் நிகழ்ச்சி, மாலையில் பிரஸ்மீட் என்று ஓடிக் கொண்டிருக்கிறேன். என்னால முடியலை.. பொறுமையா இருப்பேன். பொறுமை போயிருச்சுன்னா ஒரு நாள் வெடிச்சுச் சிதறிடுவேன்.. ஒருத்தனும் தாங்க மாட்டீங்க என்று ஆவேசமாக பேசினார் சீமான்.