"திட்டமிட்டே.. விவசாயி சின்னம்.. மறுக்கப்பட்டுள்ளது"..  சீமான் பரபரப்பான குற்றச்சாட்டு!

Manjula Devi
Mar 04, 2024,06:13 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் திட்டமிட்டே மறுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு மட்டும் தேசிய மலரான தாமரைச் சின்னத்தை ஒதுக்கியது ஏன்.. என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சரமாரியாக கேள்விகளை அடுக்கியுள்ளார்.


கட்சியின் தேர்தல் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து இன்று முறையிட்டார் சீமான். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், திமுக, அதிமுகவுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி தான் பெரிய கட்சி. எனக்கு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது திட்டமிட்ட செயல். பாஜகவுக்கு மட்டும் தேசிய மலரான தாமரைச் சின்னத்தை ஒதுக்கியது ஏன்..? நான் மயில் சின்னத்தை கேட்டேன். அது தேசியப் பறவை என்று சொன்னீர்கள். அப்ப பாஜகாவுக்கு மட்டும் ஏன் தேசிய மலரை ஒதுக்கினார்கள். 


தேர்தல் நடக்கும்போது அந்தந்த நேரத்தில் எல்லா சின்னங்களையும் மறைத்தீர்கள். கைச்சின்னம் கொடுத்தீங்க .வாக்கு செலுத்திவிட்டு கையை ஆட்டிட்டு போறாங்க. அப்ப கையை வெட்டி விடுவீர்களா? திமுகவுக்கு உதயசூரியன் ஒதுக்கினீர்கள். தினமும் காலை சூரியன் உதிக்கும். அப்ப தேர்தல் நேரத்தில் சூரியனை எப்படி மறைப்பீங்க. மேகத்தை வைத்து மறைப்பீர்களா அல்லது பெரிய ஸ்கிரீன் போட்டு மறைப்பீர்களா. 




நீங்கள் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் போட்டியிட தயார். அதற்காக ஸ்டேப்ளர் பின், குண்டூசி எல்லாம் சின்னம் என்றால் எப்படி ஏற்பது. எனக்கு புதுச்சின்னம் ஒதுக்கினால்,  எல்லா  தேர்தலுக்கும் ஒவ்வொருவருக்கும் புதுசு புதுசா தேர்தல் சின்னத்த கொடுங்க. 75 வருடமாக ஒரு கட்சிக்கு ஒரே சின்னம். அரசு நலதிட்டத்தில் உதயசூரியன் போடறீங்க. இரட்டை இலை போடுறீங்க. நாங்க எங்க போய் போடுறது.


8 சதவீத வாக்கு வங்கியை தொடவிடாமல் தடுக்க சதி செய்யப்படுகிறது. இதுதான் ஜனநாயக நாடா. எல்லோருக்கும் ஜனநாயக நாடு சரிசமமாக இல்லை. நான் வேளாண் குடிமகன். எனக்கு வேளாண் உணர்வு உள்ளது. அதை ஒட்டி என்னுடைய சின்னம் விவசாயி சின்னமாக இருந்தால் நல்லா இருக்கும் . அதனால் நான் போராடுகிறேன் என கூறினார்.