பிரதமர் நரேந்திர மோடி காரை நோக்கி ஓடி வந்த இளைஞர்.. கர்நாடகத்தில் பரபரப்பு!

Su.tha Arivalagan
Jan 13, 2023,10:54 AM IST
ஹுப்பளி: கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில்,15 வயது பையன், பிரதமர் நரேந்திர மோடியின் கார் அருகே ஓடி வந்து அவரைக்கு மாலை போட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடியாக இது பார்க்கப்படுகிறது.



பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்தபோது விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது கார் நடுப்பாலத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.  கிட்டத்தட்ட 20 நிமிட நேரம் பிரதமரின் வாகனம் பாலத்தில் நின்றிருந்தது. அவரது பாதுகாப்பில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டதாக மத்தியஅரசும் பாஜகவும் குற்றம் சாட்டியிருந்தன.

இதையடுத்து ஒரு விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் பஞ்சாப் காவல்துறை தரப்பில் தவறுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பில் எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பஞ்சாப் சம்பவத்தை விட மிகவும் அபாயகரமான பாதுகாப்பு குளறுபடி, பாஜக ஆளும் கர்நாடகத்தில் நடந்துள்ளது.  அங்குள்ள ஹுப்பளி நகரில் பிரதமர் நரேந்திர மோடி ரோட்ஷோ ஒன்றை நடத்தினார். திறந்த காரில் நின்றபடி  சாலையோரம் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தபடி பிரதமர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென 15 வயது சிறுவன் பிரதமர் காரை நோக்கி வேகமாக ஓடி வந்து பிரதமருக்கு மாலை போட முயன்றான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பிரதமரும் எதிர்பார்க்கவில்லை. போட வந்த மாலையை அவர் அப்படியே கையில் வாங்கிபாது காவலர்களிடம் கொடுத்தார். பாதுகாவலர்கள் உடனடியாக சுதாரித்து அந்தப் பையனை அந்தப் பக்கமாக அப்புறப்படுத்தினர்.

பிரதமரை கையால் தொட்டு விடும் தூரத்தில் மிக மிக நெருக்கமாக நின்று மாலை போட முயன்ற சம்பவம் மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படுகிறது.  உயர்ந்தபட்ச பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி எப்படி அந்த சிறுவன் உள்ளே புகுந்தான் என்பதுத  தெரியவில்லை. 29வது தேசிய இளைஞர் திருவிழாவைத் தொடங்கி வைப்பதற்காக  பிரதமர் ஹுப்பளி வந்திருந்தார்.

பிரதமருக்கு 5 வளைய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதில் 5வது வளையப் பாதுகாப்பு மாநில காவல்துறையின் பொறுப்பாகும். இதில்தான் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக  போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இது பாதுகாப்பு குளறுபடி இல்லை என்றும், பிரதமரின் பாதுகாப்பில் எந்த மிரட்டலும் ஏற்படவில்லை என்றும் ஹுப்பள்ளி தார்வாட் துணை போலீஸ் கமிஷனர் டாக்டர் கோபால் பயகோட் தெரிவித்துள்ளார். ஒரு பையன் மாலை போட முயன்றான்.  அந்த நபர் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று விளக்கியுள்ளார்