இந்திய மாணவி விபத்தில் பலி.. நக்கலாக சிரித்த அமெரிக்க போலீஸ்!

Su.tha Arivalagan
Sep 13, 2023,12:38 PM IST

சியாட்டில்: அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவி குறித்து நக்கலாக உயர் அதிகாரிகளிடம் கூறி சிரித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் போலீஸ் அதிகாரி ஒருவர். அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


இனவெறி செயலாக இது பார்க்கப்படுகிறது. இந்த காவல்துறை அதிகாரிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்தியாவைச் சேர்ந்தவர் 23 வயதான மாணவி ஜானவி கந்துலா. இவர் சியாட்டிலில் உள்ள வட கிழக்கு பல்கலைக்கழகத்தில் கேம்பஸ் எக்சேஞ்ச் திட்டம் மூலம் மாஸ்டர் டிகிரி படித்து வந்தார். அங்குள்ள தகவல் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் இவர் படித்து வந்தார்.




இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி ஒரு சாலை விபத்தில் மாணவி ஜானவி உயிரிழந்தார். காவல்துறை அதிகாரி கெவின் டேவ் என்பவர் வாகனம் மோதி ஜானவி உயிரிழந்தார். விபத்து நடந்தது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து மைக்கில் பேசியுள்ளார் டேவுடன் இருந்த இன்னொரு காவல்து அதிகாரியான டேணியல் ஆடரர். அப்போது ஜானவி மரணம் குறித்து கேலியாக அவர் பேசினார், ஹாஹாஹா வென சிரித்துள்ளார். மேலும் பெரிய மதிப்பில்லாத ஆள்தான் என்றும்  கூறியுள்ளார். 11,000 டாலர் கொடுத்தால் போதும் என்றும் நக்கலாக தெரிவித்துள்ளார். 


இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.