புரட்டி எடுக்கும் அதீத மழை.. தூத்துக்குடி, திருநெல்வேலி.. நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு, விடுமுறை!

Su.tha Arivalagan
Dec 18, 2023,06:54 PM IST

- மஞ்சுளா தேவி

தூத்துக்குடி: காற்றின் சுழற்சியால் ஏற்பட்ட தொடர் அதி கனமழை காரணமாக தூத்துக்குடியில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் இடைவிடாத தொடர் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நகரின் முக்கிய சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நாளை வரை மழை தொடரும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் நாளையும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.


இதேபோல திருநெல்வேலி மாவட்டத்திலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்திருப்பதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. விருநகரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.