வெயிலுக்கு ஏத்த நியூஸ்.. நாளை முதல் கோவில்களில் நீர் மோர் தரப் போறாங்களாம்..  சூப்பர்ல!

Meenakshi
Mar 14, 2024,06:10 PM IST

சென்னை:  தமிழகத்தில் 48  கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.


வெயில் காலம் என்றாலே தமிழக மக்களுக்கு அலர்ஜி தான். ஏன் என்றால் வெயிலின் கொடுமை அப்படி இருக்கும். பொதுவாக சித்திரை மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் வரும். அப்போது தான் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பார்கள். ஆனால்,  அந்த நிலைமை தற்போது மாறிவிட்டது என்றே சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மழை மற்றும் வெயில் இவை இரண்டும் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 


குறிப்பாக வெயில் காலங்களில் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியில் வரவே யோசிப்பார்கள். அதையும் மீறி வெளியில் வந்தால் அவ்வளவு தான் மண்டை காய்ந்து விடும். பாடி டிரை ஆகி, வாயெல்லாம் வறண்டு.. ஏன்டாப்பா வந்தோம்னு ஆயிடும். அந்த அளவிற்கு வெயில் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 




முக்கியமாக வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள மருத்துவர்களும் பல வழிமுறைகளை பின்பற்ற கூறுவதும் உண்டு. முன்னர் ஏப்ரல், மே தான் வெளிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் தற்பொழுது மார்ச் மாதத்திலேயே  வெயிலின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டது. 


இதையடுத்து மக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் நீர்மோர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதிலும் உள்ள 48 கோவில்களில் வெயிலின் தாக்கத்தை தணிக்க நீர் மோர் வழங்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறுகையில்,வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 48 முதல் நிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். வெயில் காலம் என்பதால் கோயில்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் நலன் கருதி நீர்மோர் பந்தல், மேட் தரை விரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட உள்ளது. 


மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நீர்மோர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கின்றேன். முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர் என்பதால் தான் வெயிலின் தாக்கம் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். கோயில்களுக்குள் கருங்கல் பதித்த தரை உள்ள இடங்களில் தரை விரிப்பு அமைக்கப்படும். 


முருகன் பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஜூன் அல்லது ஜூலை பழனியில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.