அதிகரிக்கும் புல்டோசர் கலாச்சாரம்.. நாடு முழுவதும் முற்றுப் புள்ளி வைக்கும் சுப்ரீம் கோர்ட்..!

Su.tha Arivalagan
Sep 02, 2024,02:05 PM IST

டெல்லி:   குற்றம் சாட்டபப்ட்டவர் அல்லது குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவரின் வீடு என்பதற்காகவே அவரது வீட்டை புல்டோசர் வைத்து இடிப்பது எந்த வகையான நியாயம். நாடு முழுவதும் இதுபோன்ற செயல்கள் பெருகுவதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் இந்த புல்டோசர் கலாச்சாரம் தொடங்கியது என்று சொல்ல வேண்டும். அங்கு குற்றவாளிகள், ரவுடிகள், தாதாக்கள் உள்ளிட்டோரின் வீடுகள் பல புல்டோசர் வைத்து இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மேலும் கலவரங்களில் ஈடுபடுவோர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவையும் இடிக்கப்பட்டுள்ளன. இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. காரணம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மட்டுமே இவ்வாறு இடிக்கப்படுவதாக எழுந்த புகார்தான்.


மேலும் இந்த புல்டோசர் கலாச்சாரமானது பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெரும்பாலும் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட் வரை வந்து விட்டது.




டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படுவதாகவும், ஆனால் இதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் சி.யூ. சிங் ஆகியோர் வாதிடுகையில், இந்த விவகாரத்தில் பாரபட்சமான முறையில் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.  வாடகைக்கு விடப்பட்ட கட்டடங்களையும் கூட இடித்துள்ளனர். வீட்டு உரிமையாளர் அல்லது அவரது மகன் ஏதோ ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக 50 -60 வருட கால வீடுகளையும் இடித்துள்ளனர் என்று வாதிட்டனர்.


இந்த விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டார் என்ற காரணத்திற்காக ஒரு வீட்டை இடிக்க முடியாது. இது எந்த வகையான நீதி. சட்டவிரோத கட்டடங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் இடிப்பதில் ஒரு வரைமுறை வேண்டும். முதலில் நோட்டீஸ்  கொடுங்கள், அவர்கள் பதிலளிக்க அவகாசம் கொடுங்கள். பிறகு சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளியுங்கள். இடிப்பது என்பது கடைசி கட்டமாகவே இருக்க வேண்டும். அது வீடோ அல்லது கோவிலோ எதுவாக இருந்தாலும் ஒரு வரையறை இருக்க வேண்டும்.


புல்டோசர்களை வைத்து இடிக்கும் செயல் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதை வரைமுறைப்படுத்த, ஒழுங்குக்குள் கொண்டு வர நாடு முழுவதும் பொருந்தக் கூடிய வகையில் சில விதிமுறைகளை நாங்கள் உருவாக்கவுள்ளோம். சட்டவிரோதமான முறையில் புல்டோசர்களை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


இந்த வழக்கின் விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டார் என்பதற்காக ஒரு கட்டடத்தை இடிக்க முடியாது. சட்டவிரோத கட்டுமானத்தை மட்டுமே இடிக்க முடியும்.  இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் தவறுதலாக வைக்கப்பட்டுள்ளது என்றார். பின்னர் வழக்கின் விசாரணை செப்டம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்