"பிடிஆர் ஆடியோ" .. விசாரிக்க கோரிய மனு டிஸ்மிஸ்.. தலைமை நீதிபதி கண்டனம்

Su.tha Arivalagan
Aug 07, 2023,01:06 PM IST

டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவில் கூறப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. மனுதாரருக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்தார்.


சென்னையைச் சேர்ந்த பிரானேஷ் ராஜமாணிக்கம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதில் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்து சம்பாதித்துள்ளதாக  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.




இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான் முதன்மை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவைப் பார்த்த தலைமை நீதிபதி காட்டமான பல கேள்விகளைக் கேட்டார். இது பார்த்தாலே தெரிகிறது bogus பெட்டிஷன் என்று. முதல்வர் குடும்பத்தைப் பற்றி ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அந்த ஆடியோ உண்மையானதா என்றும் தெரியவில்லை. ஆனால் அதில் கூறியுள்ளது குறித்து விசாரிக்கக் கோரியுள்ளீர்கள்.


யாரோ வெளியிட்டுள்ளார்கள். அதை வைத்துக் கொண்டு அதில் உள்ளதைப் பற்றி விசாரிக்கக் கேட்கிறீர்கள்.. 

யார் நீங்க..  என்று காட்டமாக கேட்டார் தலைமை நீதிபதி.


அதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர், நிதியமைச்சர் மாற்றப்பட்டு விட்டார் என்று கூறினார். அதைக் கேட்ட தலைமை நீதிபதி, துறையைத்தானே மாற்றினார்கள்.. என்று பதிலடி கொடுத்தார். பின்னர் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்காமலேயே தள்ளுபடி செய்து விட்டார்.