நளினிக்கு பாஸ்போர்ட்.. 4 வாரத்தில் முடிவெடுக்க.. உச்சநீதிமன்றம் உத்தரவுஉத்தரவு

Su.tha Arivalagan
Aug 24, 2023,05:06 PM IST
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினிக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக நான்கு வாரத்தில்  முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் நளினி. இவரது மகள் லண்டனில் வசித்து வருகிறார். அவரைப் பார்க்கப் போவதற்காக பாஸ்போர்ட் கோரியிருந்தார் நளினி. ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.



இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். அதில், லண்டனில் வசிக்கும் எனது மகளை பார்க்க விரும்புவதால் அதற்காக எனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்து இருந்தேன். எனினும் முறையாக விண்ணப்பம் செய்தும் இது வரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. 

காவல்துறையினர் வழக்கமான ஆய்வை நடத்தி தங்களது அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இன்னும் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. எனவே பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இ்நத விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், அவரது மனைவி நளினி உட்பட ஏழு பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில்  தண்டனையை அனுபவித்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்த நிலையில், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கடந்த 2022 நவம்பர் மாதம் விடுதலையானார்கள் என்பது நினைவிருக்கலாம்.