செந்தில் பாலாஜி கைது செல்லும்.. 5 நாள் ஈடி காவலுக்கு அனுமதி..  சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Su.tha Arivalagan
Aug 07, 2023,11:24 AM IST

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. 


மேலும் செந்தில் பாலாஜியை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் அனுதி அளித்துள்ளது. இந்த விசாரணைக் காலத்தின்போது செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து சிறப்பாக கவனித்துக் கொள்வோம் என்று அமலாக்கத்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.


அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதுதொடர்பாக ரெய்டுகளை நடத்தியது. இந்த ரெய்டுகளின் தொடர்ச்சியாக அவர் பல மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த ஹைகோர்ட் இரு நீதிபிதிகள் பெஞ்ச் முரண்பாடான தீர்ப்பை அளித்தது. இதை தொடர்ந்து 3வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3வது நீதிபதி கைது செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.


இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  ஏ.எஸ். போபண்ணா மற்றும்  எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியே. அதில் த��ையிட விரும்பவில்லை. கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் விடுவித்து உத்தரவிட்டனர். அப்போது செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து அவரது தரப்பில் நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவருக்குத் தேவையான சிறப்பான மருத்துவ வசதிகளை நாங்கள் செய்து தருவோம் என்று அமலாக்கத்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.


தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.