38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் நடிகர்.. யார் தெரியுமா?

Meenakshi
May 29, 2024,01:57 PM IST

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் ரஜினியின் நண்பராக நடிக்கிறார் சத்யராஜ்.


ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டிலும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. 


இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் கூலி, இந்தப்படம் ரஜினியின் 171வது படமாகும். இதன் டீசர் மற்றும் தலைப்பு கடந்த மாதம் வெளியானது. கூலி படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ரஜினிகாந்த், சத்யராஜ் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அவற்றில் பல படங்களில் ரஜினிகாந்திற்கு சத்யராஜ் வில்லனாகவே நடித்துள்ளார்.




1986ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் மிஸ்டர் பாரத். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி.சேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினி-சத்யராஜ் கூட்டணியில் உருவான என்னம்மா கண்ணு செளக்கியமா என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது. இப்படத்தில் ரஜினிகாந்தின் தந்தையாக வில்லன் வேடத்தில் சத்யராஜ் நடித்திருப்பார். இந்நிலையில், 38 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கூலி படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளனர். இப்படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடிக்கிறார் சத்யராஜ். 



சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சத்யராஜை அணுகினார் இயக்குனர் ஷங்கர். ஆனால் அந்த வேடத்தில் நடிக்க அப்போது சத்யராஜ் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினியுடன் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.