திமுகவில் நான் ஏன் சேர்ந்தேன்?.. திவ்யா சத்யராஜ் சொன்ன 3 முக்கியக் காரணங்கள் இதுதான்!

Su.tha Arivalagan
Jan 19, 2025,01:00 PM IST

சென்னை: நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.


கருப்பு சிவப்பு நிற சேலையில் அண்ணா அறிவாலயம் வந்த திவ்யா தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு அமைச்சர்கள்  கே.என். நேரு, பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.


ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பாகவும், தனியார் மருத்துவமனைகள் குறித்தும் தொடர்ந்து வீடியோக்கள் மூலம் தனது கருத்துக்களைத் தெரிவித்து வந்தவர் திவ்யா. அவரிடம் பலமுறை நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் வருவேன் என்று மட்டுமே அவர் கூறி வந்தார். ஆனால் எந்த்க கட்சி என்ன என்பது குறித்து அவர் சொன்னதில்லை.




இடையில் பாஜகவில் அவர் சேரப் போவதாகக் கூட செய்திகள் அடிபட்டன. ஆனால் அதை அவர் மறுத்திருந்தார். இந்த நிலையில்தான் தற்போது திமுகவில் இணைந்துள்ளார் திவ்யா. அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுமா என்ன மாதிரியான முறையில் அவர் திமுகவில் செயல்படப் போகிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் கண்டிப்பாக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அவர் பிரசாரம் செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடுக்குப் பக்கத்து மாவட்டமான கோவைதான் அவரது பூர்வீகம் என்பதால் அவரை திமுக, ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தலாம்.


திவ்யாவின் தந்தை சத்யராஜ் ஒரு தி.க. அனுதாபி மற்றும் தீவிர பெரியார் தொண்டன். பெரியார் வேடத்திலும் நடித்துள்ளார். திராவிடக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரக் கூடியவர். இந்த நிலையில் அவரது மகள் நேரடியாக திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


திமுகவில் இணைந்தது ஏன்?




திமுகவில் இணைந்தது குறித்து திவ்யா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,  மக்கள் பணி செய்வது என்பது எனது நீண்ட நாள் கனவு. நிறைய கனவுகள் உண்டு. திமுக ஆரோக்கியத்திற்கு மரியாதை தரும் கட்சி. நான் ஊட்டச்சத்து நிபுணர். தலைவரின் காலை உணவுத் திட்டம் முக்கியமானது. திமுக பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி. புதுமைப் பெண் திட்டத்தைச் சொல்லலாம். எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் ஒரே கட்சி திமுக. இதனால்தான் திமுகவில்  இணைந்தேன்.


அப்பா எனக்கு எப்போதுமே ஆதரவாக இருப்பார். என் உயிர்த் தோழர். பக்க பலமாக இருப்பார். கட்சியில் தலைவர் எனக்கு எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் அதில் நான் கடுமையாக உழைப்பேன் என்றார் திவ்யா.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்