முதலில் சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் சேரட்டும்.. எங்க கிட்ட வரத் தேவையில்லை.. ஜெயக்குமார்

Su.tha Arivalagan
Jan 18, 2023,12:41 PM IST
சென்னை: ஓ. பன்னீர் செல்வம் மாதிரியான சுயநலமியைப் பார்க்கவே முடியாது. சசிகலாவுக்கு இபிஎஸ் குறித்துப் பேச தகுதி இல்லை. முதலில் அவர் ஓ.பிஎஸ்ஸிடம் போய்ச் சேரட்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்.



அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு தரப்பிலும் பாஜக முயன்று வருகிறது. அமித் ஷா மூலம் முயன்றார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மூலம் முயன்றார்கள். எதிலும் பலன் கிடைக்கவில்லை. காரணம், எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸுடன் இணைவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே அரசியல் பேசியுள்ளார்.

இந்த நிலையில் எடப்பாடி மற்றும் ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்கப் போவதாக சசிகலா திடீரென அறிவித்துள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சிறப்பாக பயணித்து வருகிறது.  இந்த நிலையில் சசிகலா இப்படிப் பேசியிருப்பது தேவையற்றது. அவர் யார் இப்படிப் பேச. ஒருங்கிணைப்பதாக இருந்தால் முதலில் தினகரனையும், ஓபிஎஸ்ஸையும் அவர் இணைக்கட்டும். சசிகலாவும் அவர்களுடன் போய் இணைந்து கொள்ளட்டும். அவர்கள் சேர்ந்து தனிக் கட்சி கூட ஆரம்பிக்கலாம்.

சசிகலா ஆயிரம் கருத்து சொல்லலாம், அதையெல்லாம் பொருட்படுத்த முடியாது. எங்களது கட்சி விவகாரத்தில் சசிகலா மூக்கை நுழைக்கக் கூடாது.  ஓ.பன்னீர் செல்வம் மிகப் பெரிய சுயநலவாதி. அவர் சொல்வதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள், மாறாக புறக்கணிப்பார்கள் என்றார் ஜெயக்குமார்.