மனசுல ஒரு யோசனை உதித்தது.. அப்ப ராத்திரி 2 மணி இருக்கும்.. சரத்குமார் முடிவெடுத்தது இப்படித்தான்!

Meenakshi
Mar 12, 2024,07:31 PM IST

சென்னை: என் மனைவி ராதிகாவை கேட்டுத்தான் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்கும் முடிவை இறுதி செய்தேன் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.


1996ம் ஆண்டு திமுகவில் இணைந்து அரசியலுக்கு வந்தார் சரத்குமார். 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.அதன் பின்னர் 2001ம் ஆண்டு சரத்குமார் ராஜ்யசபா தேர்தலில் நின்று எம்.பி ஆனார். 2006ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார் சரத்குமார். பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றது அவரது சமத்துவ மக்கள் கட்சி. தென்காசியில் சரத்குமாரும் நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் வென்றனர். 


பின்னர் உட்கட்சி பூசல் காரணமாக அமைதியாகவே இருந்து வந்தார் சரத்குமார். நாராயணன் தற்போது சமத்துவ மக்கள் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் தனது அரசியல் கட்சியை மூடி விட்டு, பாஜகவில் இணைந்து விட்டார் சரத்குமார். இதுகுறித்து இன்று அண்ணாமலை புடை சூழ கட்சியினர், செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் சரத்குமார். அப்போது அவர் உருக்கமாக கூறியதாவது: 




பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சியாக எடுக்கப்பட்ட முடிவு. நாட்டின் வளர்ச்சிக்காகவும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


நள்ளிரவு 2 மணிக்கு இருக்கும், அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர் நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் எனக் கூறினார். மனைவியை கேட்ட பின்னர் தான் பாஜகவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.