மனைவியிடம் ஆலோசனை கேட்காமல்.. வேற யார்ட்ட கேப்பாங்க?.. சரத்குமார் பொளேர் கேள்வி!

Su.tha Arivalagan
Mar 13, 2024,05:51 PM IST

சென்னை: நான் பாஜகவில் ஒரு உறுதியோடு வந்து இணைந்திருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன். மீண்டும் நரேந்திர மோடி 3வது முறை பிரதமர் ஆவார். 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு சக்திகளும் இருக்காது. பாஜக ஆட்சியமைக்கும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.


அகில இந்திய சமத்துவக் கட்சியை நடத்தி வந்த சரத்குமார் தற்போது தனது கட்சியை நேற்று பாஜகவுடன் இணைத்து விட்டார். தற்போது பாஜக பிரமுகராக மாறியுள்ள சரத்குமார் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர்.




அப்போது சரத்குமார் கூறுகையில், எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு கன்விக்ஷனுடன் வந்திருக்கிறேன். மோடி 3வது முறையாக பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருக்கிறேன். இணைந்தால்தான் சரியாக இருக்கும் என்பதால் இணைந்துள்ளேன். நான் எப்படி பயணிப்பேன் என்பதை கட்சி மேலிடம் சொல்லும். பாஜக இடும் கட்டளைக்கேற்ப நான் செயல்படுவேன். கட்சியில் இணைந்த பிறகு அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். 


யாரையும் நான் தரக்குறைவாக பேசியதில்லை, அப்படி பேசுபவனும் அல்ல நான்.  ஆனால் நான் பேசியபோது கூறிய வார்த்தைகளை வைத்து விமர்சித்துள்ளனர். நைட்டெல்லாம் சரத்குமாருக்கு தூக்கம் இல்லையா, மனைவியிடம் கேட்டுத்தான் முடிவெடுப்பாரா என்றெல்லாம் விமர்சித்துள்ளனர். மனைவியிடம் ஆலோசனை கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்கள்? இதெல்லாம் ஒரு பேச்சா.. !


ஒரே ஒருவர்தான் கருத்து தெரிவித்து பேசினார். அவரும் கூட மைக்கை நீட்டினார்கள் நான் கருத்தை தெரிவித்தேன் என்று கூறி பின்னர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். ஒருவர் பேசியதற்கெல்லாம் நான் கருத்து தெரிவித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அது மொத்தத் தொண்டர்களின் கருத்தாகாது.


நான் பொறுப்பை எதிர்பார்த்து வரவில்லை, பொறுப்போடு நடந்து கொள்ள வந்திருக்கிறேன். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அவர் வந்தால்தான் நாடு செழிக்கும். 2026 தேர்தலில் தமிழ்நாட்டின் இரு சக்திகளும் இல்லாமல், பாஜக ஆட்சியமைக்கும் என்றார் சரத்குமார்.