ராதிகா தேர்தலில் ஜெயிக்கணும்.. விருதுநகர் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்

Meenakshi
Jun 03, 2024,01:43 PM IST

விருதுநகர்: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தனது மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி வரை நடைபெற்றது. இதல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்  நாளை  எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 




நாடாளுமன்ற  தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்னர் ராதிகாவின் கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். அந்த கட்சியை பாஜகவுடன் இணைந்த பின்னர் தான் ராதிகா இந்ததேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் ராதிகாவிற்கு பாஜக ஒதுக்கிய அதே தொகுதியில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் போட்டியிடுகிறார். அது மட்டும் இன்றி ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாணிக்க தாகூரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.


கடுமையான மும்முனை போட்டி நிகழும் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று சரத்குமார் விருதுநகரில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்தார். ராதிகாவும் உடன் இருந்தார். சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், வெற்றி யாருக்கு என்பது நாளை தெரிந்துவிடும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.