"சூரியவம்சம் தேவயானி போல".. கலகலக்க வைத்த நடிகர் சரத்குமார்.. வெடித்துச் சிரித்த ராதிகா!

Su.tha Arivalagan
Mar 24, 2024,05:01 PM IST

மதுரை:  சூரியவம்சம் படத்தில் எப்படி படிக்காத நான் எனது மனைவியை கலெக்டர் ஆக்கினேனோ அதுபோல இவங்களை எம்.பி ஆக்குவேன் என்று சரத்குமார் கூற, அருகே நின்றிருந்த அவரது மனைவியும், விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளருமான ராதிகா வெடித்துச் சிரிக்க, கடும் வெயிலையும் மறந்து கூடியிருந்த கூட்டம் கலகலப்பானது.


விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இவர் இன்று தனது பிரச்சாரத்தை விருதுநகர் தொகுதிக்குட்பட்ட, மதுரை திருப்பரங்குன்றத்தில் தொடங்கினார். அங்குள்ள முருகன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினர் பாஜகவினர். ராதிகாவும், சரத்குமாரும் தொண்டர்கள் புடை சூழ கோவிலுக்கு வந்திருந்தனர்.


சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு ராதிகா சரத்குமார் அளித்த பேட்டியின்போது, இங்கு உள்ளவர்களுக்கு வேலையாவாப்பு, இருக்க இடம், உணவு இதுதான் முக்கியம். பிரதமர் மோடி பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். அதில் பல திட்டங்கள் இங்கு வராமல் உள்ளது. அவையெல்லாம் வர வேண்டும். அதற்கேற்ப பாடுபடுவோம் என்றார்.




சரத்குமார் பேசும்போது, நான் போட்டியிட்டால் என்ன, எனது மனைவி போட்டியிட்டால் என்ன.. எல்லாம் ஒன்றுதான். அவருக்கு வாய்ப்பு கொடுத்தது எனக்கு வாய்ப்பு கொடுத்தது போலத்தான். மகளிருக்கு வாய்ப்பு கிடைத்தது சநதோஷமானதே. வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்னால் பெண் இருக்கிறார் என்பார்கள். 


எப்படி சூரிய வம்சம் படத்தில் படிக்காதவன் கலெக்டர் ஆக்கினேனோ அதுபோல இவரை எம்.பி ஆக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ராதிகா சொன்னது போல, பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கடந்த ஒரு மாதமாக, விருதுநகர் தொகுதி மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையும் படித்துள்ளார் ராதிகா.  நிச்சயம் நிறைய செய்வார்.


காமராஜர் பிறந்த மண் இது. அங்கு ராதிகா போட்டியிடுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. காமராஜர் ஆட்சியைப் போலத்தான் மோடி ஆட்சி செய்து வருகிறார். என்னெல்லாம் செயல்படுத்தப்படாமல் உள்ளதோ அதையெல்லாம் நாங்கள் கொண்டு வருவோம் என்றார் சரத்குமார்.