saraswati puja 2023 .. கல்விக்கான தேவி மட்டுமா சரஸ்வதி?

Aadmika
Oct 23, 2023,10:45 AM IST

சென்னை : பெண் சக்தியை, அன்னை பராசக்தியாக போற்றி வழிபடும் விழா நவராத்திரியாகும். இந்தியாவில் அனைத்து தர மக்களால் ஒற்றுமையுடன், பாசம், நட்பு, உறவுடன் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் நவராத்திரியும் ஒன்று. 


நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரையும் பலவித ரூபங்களில் அலங்கரித்து வழிபடுகிறோம். நவராத்திரியின் இறுதி நாளான ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை செய்து வழிபடுகிறோம்.


சரஸ்வதி பூஜை என்றது பலரும் அது குழந்தைகள் அல்லது படிப்பவர்கள் வணங்க வேண்டிய நாள் என்றும், விடுமுறை நாள் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் சரஸ்வதி தேவி என்பவள் கல்விக்கு மட்டும் உரிய தெய்வம் கிடையாது. அவள் ஞானத்தை, அறிவை வழங்கக் கூடிய தெய்வம். ஒரு கலையை கற்பதாக இருந்தாலும், எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதாக இருந்தாலும் அதற்கு ஞானம் என்பது வேண்டும். அதை வழங்கக் கூடியவள் சரஸ்வதி தேவி. 




அதே போல் பேச்சிற்கு உரிய தெய்வமும் சரஸ்வதி தான். அதனால் தான் சரஸ்வதிக்கு வாக் தேவி என்றொரு திருப்பெயர் உண்டு. கிராமங்களில் பேச்சியம்மன் என்ற பெயரில் வணங்கப்படுவது சரஸ்வதியை தான். பேச்சிற்குரிய அம்மனாகவும் இவளே விளங்குகிறாள். 


சரஸ்வதி தேவிக்கு மிக சில இடங்களில் மட்டுமே கோவில் உண்டு. வழிபாட்டு முறை என்பது கிடையாது. அதனால் வருடத்திற்கு ஒருமுறையாவது சரஸ்வதியை வணங்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே சரஸ்வதி பூஜையாகும். இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை  அக்டோபர் 23 ம் தேதி வருகிறது. இந்த நாளில் குழந்தைகள், பெரியவர் என அனைவரும் சரஸ்வதி தேவிக்குரிய நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் புத்தகங்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அவர்களின் அலுவலக கோப்புகள், தொழில் செய்பவராக இருந்தால் கணக்கு எழுதும் புத்தகம் ஆகியவற்றை சரஸ்வதி முன் வைத்து வழிபட வேண்டும்.


நம்முடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய, வாழ்வை உயர்த்தக் கூடியதற்கு பயன்படும் பொருட்களை படைத்தும் வழிபடுவதை ஆயுத பூஜை என்கிறோம். நவராத்திரியின் முதல் எட்டு நாட்களும் வழிபடாவிட்டாலும் கடைசி நாளான சரஸ்வதி பூஜை அன்று மூன்று தேவியர்களையும் வணங்க வேண்டும். நவராத்திரியின் விழாவின் இறுதியாக பத்தாவது நாளில் விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இது அம்பிகை, அசுரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள் என்பதால் வெற்றி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் துவங்கப்படும் தொழில்கள், கல்வி உள்ளிட்டவைகள் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.