செல்போனில் ஆபாச வார்த்தை, மிரட்டல் .. நா.த.க.வினர் மீது சங்ககிரி ராஜ்குமார் குற்றச்சாட்டு!
சென்னை: உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை. உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள் என்று நாம் தமிழர் கட்சியினருக்கு இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படத்தை எடிட் செய்தது நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சீமான் இதற்கு நேரடியாக பதில் எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்தார். மேலும், சங்ககிரி ராஜ்குமார் ஒரு பெரியார்வாதி என்பதால் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனது எக்ஸ் தள பதிவில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம்.
கடந்த நான்கு ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள். அதற்காக அச்சப்பட்டு கொண்டு இந்த பதிவை எழுதவில்லை.
கசப்பை சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள் தான் ஆறுதல் தரும் என்றால் பேசிவிட்டு போங்கள். இடையிடையே டேய்..சங்ககிரி ராஜ்குமார் நீ எந்த ஊர் காரன்டா என்று கேட்டு சிரிப்பும் மூட்டுகிறீர்கள்.
உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை. உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.
எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள்.
வீரம் நிறைந்த அவர் புகைப்படத்தை கண்களில் பார்த்துக் கொண்டே, காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது.
உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை முடிந்த வரை இழிவு செய்து விட்டீர்கள் இனியேனும் விட்டு விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்