சோயப் மாலிக் விலகவில்லை.. சானியா மிர்ஸாதான் விவாகரத்து செய்து விட்டார்.. அப்பாவின் பரபர தகவல்!

Su.tha Arivalagan
Jan 20, 2024,05:40 PM IST

ஹைதராபாத்: இஸ்லாமிய முறைப்படி, தனது மகள்தான், சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து விட்டதாக சானியா மிர்ஸாவின் தந்தை இம்ரான் மிர்ஸா கூறியுள்ளார்.


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை சனா ஜாவேத் என்பவரை சோயப் மாலிக் திருமணம் செய்து கொண்டுள்ளார்.




இந்த செய்தி இரு நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு முதலே உறவு சரியாக இல்லை என்று கூறப்பட்டது. இடையில் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த கல்யாணம் தற்போது முடிந்து விட்டது.


இருவருக்கும் இடையே எப்போது விவாகரத்து நடந்தது என்பது பலரையும் குழப்பியுள்ளது. ஆனால் இதுகுறித்து சானியா மிர்ஸாவின் தந்தை இம்ரான் மிர்ஸா விளக்கியுள்ளார்.  அவர் கூறுகையில், குலா முறைப்படி சானியா மிர்ஸாவும், சோயப்பும் பிரிந்து விட்டனர் என்று கூறியுள்ளார் அவர். குலா என்றால், இஸ்லாமிய முறைப்படி, ஒரு மனைவி, தனது கணவரை விட்டு தானாகவே பிரிந்து சென்று விடலாம். அந்த முறைப்படி, சானியா மிர்ஸா, சோயப்பை விட்டு அவராகவே விவாகரத்து செய்து பிரிந்து வந்து விட்டார்.


சானியா மிர்ஸா, சோயப் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது சானியாவுடன்தான் வசித்து வருகிறார். சோயப் திருமணம் குறித்து சானியா மிர்ஸா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. சோயப் மணந்துள்ள நடிகை சனா ஜாவேத், நிறைய டிவி சீரியல்களில் நடித்துள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் ஏற்கனவே திருமணமானவர். அவரது முதல் கணவர் பெயர் உமைர் ஜெய்ஸ்வால். 2020ம் ஆண்டு இந்தத் திருமணம் நடந்தது.  அதன் பிறகு இருவரும் விவாகரத்து செய்து விட்டனராம்.