சானியா மிர்ஸாவின் கண்ணீர் குட்பை.. கடைசிப் போட்டியில் தோல்வி..!

Baluchamy
Jan 27, 2023,12:19 PM IST
மெல்போர்ன்:  இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, தனது கடைசி டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியை தோல்வியுடன் முடித்துள்ளார்.



இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார். 

இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி ஏகப்பட்ட பதக்கங்களையும், சாம்பியன் படத்தையும் வென்ற சானியா, கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தவர். குறிப்பாக இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் அதிக பட்டங்களை வென்றுள்ளார்.

2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் ஜோடி இணைந்து முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று, அந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

மகளிர் டென்னிஸ் உலகில் ஜாம்பவானாக வலம் வந்த சானியா, கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற போவதாக முடிவு செய்திருந்தார். பின் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடினார்.

இந்தத் தொடரில் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து ஆடிய அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இறுதிச் சுற்றில் பிரேசில் அணியிடம் தோல்வியைத் தழுவியது இந்திய ஜோடி. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சானியாவின் தோல்வி  ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.  இதுதான் சானியா ஆடிய கடைசி கிராண்ஸ்லாம் போட்டியாகும். இதனால் கண்ணீர்ப் பெருக்குடன் அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெற்றார் அவர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் 6 முறை கிராண்ட் ஸ்லாம் படத்தை வென்ற சானியாவின் டென்னிஸ் வாழ்கை தோல்வியுடன் முடிவடைந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.