உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய வேண்டும்.. திருச்சியில் எச். ராஜா ஆவேசம்

Meenakshi
Sep 11, 2023,01:35 PM IST
திருச்சி: சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார். தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற அவரை பின்னர் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சனாதனம் என்பது டெங்கு, மலேரியா  கொசு போன்றது. அதை ஒழிக்க வேண்டும். அதை ஒழிக்கும் வரை ஓய மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தா். இந்தப் பேச்சுக்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் குவிந்தது.



இந்த நிலையில் உதயநிதிஸ்டாலினைக் கண்டித்தும், அவரை கைது செய்யக் கோரியும் திருச்சியில் பாஜக சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பாஜகவினர் அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று தடையை மீறி எச். ராஜா உள்ளிட்டோர் போராட்டம் நடத்த வந்தபோது அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது எச். ராஜா ஆவேசமாக முழக்கமிட்டார்.

கைது செய்யப்படுவதற்கு முன்பு எச். ராஜா பேசுகையில், சனாதனம் இன்று இருக்கிறதா.. இல்லை. புராண காலத்தில் இருந்து மாறி மாறி இப்போது நிறைய மாறிப் போய் விட்டது. இல்லாத சனாதனத்தை அளவிடுவது யார்.. சுபவீ, திருமாவளவன் ஆகியோரெல்லாம் பிறந்ததற்குப் பின்னர்தான் ஆணவக் கொலைகளே நடக்கின்றன. அதற்கு முன்பு இருந்ததா இல்லையே.

இனப்படுகொலைக்கு ஒப்பான கருத்தைச் சொல்லியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். நாட்டின் 80 சதவீத மக்களைக் கொல்வோம் என்பதற்குச் சமம் அவரது பேச்சு. அவரைக் கைது செய்ய வேண்டும். அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

திருவள்ளுவர் சனாதனம் பற்றிப்  பேசியுள்ளாரே.. அவரே ஒரு சனாதனிதான். ஆனால் வைரமுத்து இல்லை என்கிறார். அவர் பொய் சொல்கிறார்.  சனாதனத்தை இவர்கள் ஒழிப்பது இருக்கட்டும்.. திராவிட இயக்கங்களை நாங்கள் ஒழிப்போம். ஆட்சியைப் பிடிப்போம் என்றார் எச். ராஜா.