மதுரை வட்டார வழக்கில்.. நறுக்கான வசனங்களுடன்.. சமுத்திரக்கனி ஹீரோவாகும்.. புதிய படம்!

Su.tha Arivalagan
Aug 15, 2024,02:22 PM IST

சென்னை: இயக்குநரும், நடிகருமான சமுத்திர கனி மீண்டும் கதை நாயகனாக அவதாரம் எடுக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். இப்படம் மதுரை பின்புலத்தைக் கொண்ட கதையாகுமாம்.


உதவி இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் இயக்குநராகி, அதன் பின்னர் நடிகராகி அசத்திக் கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் தமிழ், தெலுங்கு என் அதகளம் செய்து கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. வித்தியாசமான வேடமா, கூப்பிடு சமுத்திரக்கனியை என்று சொல்லும் அளவுக்கு விதம் விதமான பாத்திரங்களில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.




இந்த நிலையில் வித்தியாசமான கதைக்களத்தில் நாயகனாக அவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். முதல் கனவே, அதே நேரம் அதே இடம்,  ஆட்டி" படங்களை தயாரித்தும்  பகிரி, பெட்டி கடை , தமிழ் குடிமகன் ஆகிய மூன்று படங்களை தயாரித்து டைரக்ட் செய்தும் வெளியிட்டவர் இசக்கி கார்வண்ணன். அடுத்து தமது லட்சுமி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இசக்கி கார்வண்ணன் 7வது படைப்பாக சமுத்திரகனி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள அழகிய இடங்களில் வளர உள்ளது.


பிரபல முன்னணி கதாநாயகி சமுத்திரகனியின் ஜோடியாக நடிக்கிறார். அவரது பெயரை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர். ராம்பிரபு தயாரிப்பு நிர்வாகத்தில் முன்னனி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு பெறும் இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் பெயர்களை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.




கண்டுபிடி கண்டுபிடி, ஐ.பி.சி. 376 ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பாராமன் தமது மூன்றாவது படைப்பாக இதை டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படம் குறித்து ராம்குமார் கூறுகையில், அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் தீயவர்களை தட்டி கேட்கும் கதைகள் ஆயிரம் வந்துள்ளது. ஆனால் இந்த கதை முற்றிலும் மாறுபட்டது. முழுவதும் வேறுபட்டது.  அநியாயத்தை இவன் எதிர் கொள்வதே சிறப்பாக மட்டுமல்ல மக்களின் கைதட்டலோடு காட்சிகள் நகரும் .


திரில்லும், திகிலும் மட்டுமல்ல மிரட்டலும் சேர்ந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். மதுரை வட்டார வழக்கில் "நறுக்"கான வசனம் எழுதி இருக்கிறேன்.  சமுத்திரகனி சார் கதையை நான்கு மணி நேரத்தில் படித்து விட்டு  பாராட்டினார். அதுவே எனக்கு மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் இப்படத்தை டிசம்பருக்குள் ரிலீஸ் செய்யலாம் என்று கூறி இருக்கிறார். படத்தின் டைட்டிலை பிரபல கதாநாயகன் அறிமுகப்படுத்த இருக்கிறார்  என்றார்.