ஆந்திராவைச் சேர்ந்த .. 24 வயது மாணவர்.. அமரிக்காவில் சுட்டுக் கொலை

Su.tha Arivalagan
Apr 21, 2023,02:42 PM IST
அமராவதி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். பெட்ரோல் நிலையத்தில் நடந்த மோதலில் இந்த பரிதாப மரணம் நேர்ந்துள்ளது.

அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் கொலம்பஸ் நகரில் சயீஷ் வீரா என்ற இந்த மாணவர் முதுகலைப் படிப்பில் படித்து வந்தார்.  பகுதி நேரமாக பெட்ரோல் பங்க் ஒன்றிலும் பணியாற்றினார்.  உள்ளூர் நேரப்படி 20ம் தேதி நண்பர் 12.50 மணியளவில் அஹ்கு பெட்ரோல் போட வந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சயீஷ் வீராவை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டதில் வீரா படுகாயமடைந்தார்.

உடனடியாக  சயீஷ் வீராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் குறித்து சயீஷ் வீராவின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமாரவில் பதிவான உருவத்தை வைத்து புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. கொலையாளியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



இன்னும் 10 நாட்களில் பட்டம் வாங்கவிருந்தார் சயீஷ் வீரா. ஆனால் அதற்குள் ஒரு ஆத்திரக்காரனின் அவசரப் புத்தியால் உயிர் போயுள்ளது.  சயீஷ் வீராவின் குடும்பத்தில் இவர்தான் முதல் முறையாக அமெரிக்கா வந்தவர் ஆவார். இவரது தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சயீஷ் வீராவைத்தான் குடும்பம் நம்பியிருந்தது.

கொலம்பஸ் பகுதியில் தான் தங்கியிருந்த ஏரியாவில் பலரையும் நண்பர்களாக்கியிருந்தார் சயீஷ் வீரா. அப்பகுதியில் கிரிக்கெட் ஆடுவோர் மத்தியில் இவர் பிரபலமும் கூட. சயீஷ் வீராவின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.