சென்னை கொண்டு வரப்படும் வெற்றி துரைசாமி உடல்..  இன்று இறுதிச் சடங்குகள்

Meenakshi
Feb 13, 2024,10:59 AM IST

சென்னை: முன்னாள் மேயர் சைதை துரைச்சாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது.


சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின்  மகன் வெற்றி துரைச்சாமி. இவருக்கு வயது 45. வெற்றி துரைசாமி  பிப்ரவரி 4ம் தேதி ஹிமாச்சலப் பிரதேசத்தில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது வாடகை கார் ஒன்றில் பயணம் செய்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வெற்றியின் நண்பர் கோவிந்த் சிம்லா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் சிக்கி காணாமல் போன வெற்றி துரைச்சாமியை தேடும் பணி நடைபெற்று வந்தது. மத்திய, மாநில, பேரிடர் மீட்புப்படையினர், காவல்துறையினர், கடற்படையினர் என அனைத்து தரப்பினரும் வெற்றியின் உடலை தொடர்ந்து தேடி வந்தனர்.




ஒன்பதாவது நாளாக நேற்று நடந்த தேடுதல் வேட்டையின்போது, பிற்பகல் 2 மணி அளவில் விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் தொலைவில் வெற்றி துரைச்சாமியின் உடலை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். உடல் மீட்கப்பட்ட பகுதியில் மைனஸ் 7  டிகிரி முதல் 15  டிகிரி வரை குளிர் நிலவுவதால் உடல் அழுகாமல் இருந்துள்ளது. 


வெற்றியின் உடல் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது. அதன் பின்னர் மாலை 5 முதல் 6 மணிக்குள் சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு தியாகராய நகரில் உள்ள மயானத்தில் வெற்றியின் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.