சைதை துரைசாமி மகன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Meenakshi
Feb 13, 2024,11:39 AM IST

சென்னை: முன்னாள் மேயர் சைதை துரைச்சாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவிற்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின்  மகன் வெற்றி துரைச்சாமி. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடந்த விபத்தில் காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.  அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் 




இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் சைதை துரைசாமியின் மகன் வெற்றித் துறை சாமி உயிரிழந்தது, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்து செய்தியை பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். எந்த ஒரு தந்தையும் எதிர்கொள்ள கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு இத்துயர் மிக நேரத்தில் எனது இதயபூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 


அன்பு சகோதரர் சைதை துரைசாமி அவர்கள் தாலாட்டி, சீராட்டி, அழகு பார்த்து வளர்த்த தன் ஒரே மகனை இழந்தது அவருக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். மகனை இழந்து மிகுந்த சோகத்தில் வாழும் சைதை துரைசாமி துயரத்தில் நானும் பங்கேற்கின்றேன். பெற்ற மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு, அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் வெற்றி துரைசாமியுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்றார்.


தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்


முன்னாள் சென்னை மேயர் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமியின் மகன் வெற்றித் துரைசாமிக்கு சிறுவயதிலேயே இப்படி ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 


இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்று செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மனவேதனையும் அடைந்தேன். மகனை இழந்து தவிக்கும் அன்பு சகோதரர் துரைச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனின் இழப்பினை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன்


சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி  அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவு செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது. வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாக தன் பணிகளை செய்து வந்த இளைஞர் இப்படி ஒரு விபத்தில் இறுதியை அடைந்தது  எண்ணத் தாளாத துக்கம். மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனதோடு ஆறுதல் கூறி தழுவிக் கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 


சென்னை மாநகர முன்னாள் மேயரும் சமூக சேவகருமான சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும் திரைப்பட இயக்குனர் வெற்றி துரைசாமி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.  வெற்றி துரைசாமி தான் சைதை துரைசாமியின் உலகம். வெற்றியின் மறைவு சைதை துரைசாமிக்கு எத்தகைய இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை.


வெற்றியை இழந்து வாடும் அவரது தந்தை சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.