ஒரு மகன் போனாலும்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் மகன்கள், மகள்கள் இருக்கின்றனர்.. சைதை துரைசாமி உருக்கம்!

Manjula Devi
Feb 14, 2024,10:28 AM IST

சென்னை:  ஒரு மகன் போனாலும் ஐஏஎஸ் ஐபிஎல் பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள் இருக்கின்றனர். நான் கலங்க மாட்டேன். எனது சேவையை பிரதானப்படுத்துவேன் என மனித நேயம் அமைப்பின் தலைவரும், முன்னாள் சென்னை மாநகர மேயருமான சைதை துரைசாமி உருக்கமாக பேசியுள்ளார்.


சைதை துரைசாமியின் மகனான, இயக்குனர் வெற்றித் துரைசாமி திரில்லர்  படம் எடுப்பதற்காக லொகேஷன் தேடி இமாச்சல பிரதேசம், லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவரது கார் திடீரென நிலைத் தடுமாறி சட்லஜ் ஆற்றங்கரையில் கவிழ்ந்தது. இவர்களுடன் பயணித்த கார் டிரைவர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார்.  உதவியாளர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு,மருத்துவமனையில் அனுமதித்தனர். 




மாயமான வெற்றி துரைசாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். நேற்று உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.  வெற்றி துரைசாமியின் உடல் நேற்று கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது மயானத்தில் கண்கலங்கியபடி சைதை துரைசாமி பேசும்போது, எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் கலங்க மாட்டேன். சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என இந்நாளில் சூளுரை கொள்கிறேன். 


ஒரு மகன் போனாலும் ஐஏஎஸ்.., ஐபிஎஸ்.. பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள், இருக்கின்றனர். இங்குள்ள அனைத்து சமூகத்தினரை சேர்ந்தவர்களையும் அரசு பணியில் சேர்க்க வைக்க முயற்சிப்பேன். இதனை இந்த நேரத்தில் உறுதியாக எடுத்துக் கொள்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.


சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கானோர் அரசுப் பணிகளில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சைதாப்பேட்டையில் இரவு நேர பாடசாலைகளை நடத்தி பலருக்கு கல்வி அறிவையும் கொடுத்து வந்தவர் சைதை துரைசாமி என்பதும் முக்கியமானது.