"என் கால்ல விழுந்த கோலி.. இன்னிக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்".. சச்சின் செம ஹேப்பி!

Su.tha Arivalagan
Nov 15, 2023,06:20 PM IST

மும்பை: விராட் கோலி இந்திய அணியில் முதல் முறையாக விளையாடியபோது எல்லா வீரர்களும் சேர்ந்து என் காலில் விழு.. அப்போதான் நீ பெரிய ஆளாக முடியும் என்று அவரைக் கிண்டலடித்து கலாய்த்தனர். இன்று அதே விராட் கோலி எனது சாதனையை முறியடித்திருப்பது மிக மிக மகிழ்ச்சி தருகிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.


விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று தனது 50வது சதத்தை விளாசி புதிய சாதனையைப் படைத்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கரின் 49 சத சாதனையை அவர் சச்சினின், மும்பை மைதானத்தில் வைத்தே, அவர் முன்னிலையிலேயே முறியடித்து அசத்தியுள்ளார்.




விராட் கோலி நிகழ்த்திய இந்த வரலாற்று சாதனையை சச்சின் டெண்டுல்கர் நேரில் கண்டு ரசித்து கை தட்டி வரவேற்று மகிழ்ந்தார். சதம் அடித்து முடித்ததும், விராட் கோலி இரு கைகளையும் கீழே போட்டு சச்சினை நோக்கி வணங்கி தனது சாதனையை அவருக்கு அர்ப்பணம் செய்தார்.


விராட் கோலியின் இந்த சாதனை குறித்து சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகப் பெரிய சாதனை. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மும்பையில் இந்த சாதனை நடந்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது. விராட் கோலி முதல் முறை இந்திய அணியில் சேர்க்கப்பட்டபோது, டிரஸ்ஸில் ரூமில் நடந்தது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.


அப்போது எல்லா வீரர்களும் சேர்ந்து எனது காலில் விராட் கோலியை விழச் சொன்னார்கள். அப்போதுதான் நீ பெரிய ஆளாக முடியும் என்று கிண்டலடித்தனர். அவர்களது கேலி கிண்டலைப் பார்த்து நான் சிரித்தேன்.. இன்று அதே வீரர் இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்திருப்பது மிகப் பெரிய சாதனை.. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் சச்சின் டெண்டுல்கர்.