மனைவி சாரா அப்துல்லாவை (பரூக் அப்துல்லாவின் மகள்) விட்டுப் பிரிந்தார் சச்சின் பைலட்..!

Su.tha Arivalagan
Nov 01, 2023,03:50 PM IST
ஜெய்ப்பூர்:  மனைவி சாரா அப்துல்லாவை விட்டுப் பிரிந்து விட்டதாக சச்சின் பைலட் கூறியுள்ளார். ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது அதில் தனது மனைவியை விட்டுப் பிரிந்து விட்ட விவரத்தை அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள்  ஜம்மு காஷ்மீர் காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லாவின் மகள்தான் சாரா அப்துல்லா. இவரது சகோதரர்தான் உமர் அப்துல்லா. சாராவைத்தான் சச்சின் பைலட் காதலித்துத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு 2004ம் ஆண்டு திருமணமானது.

இருவருக்கும் இடையே சில காலத்திற்கு முன்பு மனஸ்தாபம் ஏற்பட்டது. அவர்கள் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இரு குடும்பத்தாரும் எதையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டது தற்போது உறுதியாகியுள்ளது. ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் சச்சின் பைலட், போட்டியிடுகிறார். இதற்காக டாங்க் தொகுதியில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது மனைவியை விட்டு பிரிந்து விட்ட தகவலை அவர் தெரிவித்துள்ளார்.



தனது வேட்பு மனுவில் தனது திருமண நிலை குறித்து சச்சின் பைலட் தெரிவிக்கவையில், விவாகரத்து செய்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதிக்கு ஆரன், வேஹான் என இரு மகன்கள் உள்ளனர்.  அவர்கள் தன்னுடன் வசிப்பதாகவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

சாராவும், சச்சினும் அமெரிக்காவில் படித்தபோதுதான் காதலிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் நட்பாக மலர்ந்த இது பின்னர் காதலாக மாறியது. கிட்டத்தட்ட 3 வருடத்திற்கும் மேலாக இருவரும் காதலித்தனர்.  இருப்பினும் இருவரும் வேறு வேறு மதம், கலாச்சாரம் என்பதால் இரு குடும்பத்தாரும் ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்தனர். இருப்பினும் சச்சின் பைலட் தொடர்ந்து முயற்சி செய்து பரூக் அப்துல்லா குடும்பத்தினரின் அன்பையும், சம்மதத்தையும் பெற்றார். ஆனால் திருமணத்திற்கு சாராவின் குடும்பத்தார் வரவில்லை. பின்னர் நாளடைவில் பேரன் பிறந்ததும் பரூக் அப்துல்லா இறங்கி வந்தார். குடும்பங்களும் ஒன்றிணைந்தன.