ஆவணி மாத பூஜை 2024 : இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு

Aadmika
Aug 16, 2024,11:12 AM IST

சபரிமலை :   ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று (ஆகஸ்ட் 16) மாலை திறக்கப்பட உள்ளது. இதனால் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செய்ய தயாராகி வருகின்றனர்.


கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில். மற்ற கோவில்களை போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடத்தின் அனைத்து நாட்களும் திறந்திருப்பது கிடையாது. காட்டுப் பகுதியில், ஐந்து மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு சுவாமி ஐயப்பன், தவக்கோலத்தில் உலக நன்மைக்காக தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். அதனால் ஐயப்பனின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே சபரிமலையில் கோவில் நடை திறக்கப்படும் வழக்கம் இருந்து வருகிறது.




ஒவ்வொரு ஆண்டும் காத்திகை முதல் தேதி துவங்கி, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல பூஜை நடைபெறும் நாடக்களில் மட்டுமே நீண்ட நாட்கள் தொடர்ந்து திறந்திருக்கும். 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவடைந்ததும். மீண்டும் கோவில் நடை அடைக்கப்படும். ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் மகரஜோதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, பொங்கல் அன்று மாலை தெரியும் மகரஜோதி தரிசனத்திற்கு பிறகு 5 நாட்கள் மட்டும் நடைதிறந்திருக்கும்.அதற்கு பிறகு பக்தர்கள் யாரும் மலையேற அனுமதி கிடையாது. வருடாந்திர மண்டல பூஜை தவிர, ஒவ்வொரு மலையாள மாத பிறப்பு, ஓணம், சித்திரை விஷூ உள்ளிட்ட முக்கிய காலங்களில் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டு, ஐயப்பனுக்கு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.


பொதுவாக மண்டல பூஜை காலத்திலேயே லட்சக்கணக்கான பக்தர்கள், மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மாதந்தோறும் திறக்கப்பட்டு காலங்களில் ஆரம்பத்தில் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் மட்டுமே வந்து சென்றனர். தற்போது மற்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கிறார்கள். இந்த ஐந்து நாட்கள் சபரிமலையின் சுவாமி தரிசனம் செய்வதற்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். 


அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 17) தமிழ் மாதமான ஆவணி மாதம் பிறக்கிறது. இது மலையாள காலண்டரில் சிங்க மாதம் என்றும், சிம்ம சங்கராந்தி என்றும் குறிப்பிடுவார்கள். இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 16ம் தேதியான இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட உள்ளது. இன்று மாலை நடைபெறும் பூஜையில் கோவில் மேல்சாந்தி, நம்பூதிரி ஆகியோர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். நாளை காலை முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கோவில் நடைதிறக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.


ஆகஸ்ட் 21ம் தேதி மாலை கோவில் நடை மீண்டும் சாத்தப்படும். அதற்கு பிறகு ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக செப்டம்பர் 14ம் தேதி மாலை மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும். செப்டம்பர் 15ம் தேதி மலையாள தீபாவளி என போற்றப்படும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அன்று காலை துவங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் திறந்திருக்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்