"சுவாமியே சரணம் ஐயப்பா"... சரண கோஷம் முழங்க சபரிமலையில் மகரஜோதி தரிசனம்

Su.tha Arivalagan
Jan 15, 2024,06:41 PM IST

சபரிமலை : புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், லட்சக்கணக்கான பக்தர்களின் சரண கோஷத்திற்கு இடையே மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக நவம்பர் 17ம் தேதியும், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதியும் கோவில் நடைதிறக்கப்பட்டது. மண்டல பூஜை துவங்கியது முதலே முன்பு எப்போதும் இல்லாத அளவில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 


மகரஜோதி விழாவிற்காக பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஆன்லைன் புக்கிங் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இதனால் தினமும் ஒன்றரை லட்சம் வரையிலான பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்தனர்.




மகரவிளக்கு விழாவிற்காக ஜனவரி 12ம் தேதி எருமேலியில் பேட்டைதுள்ளல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜனவரி 13ம் தேதி பந்தள அரண்மனையில் இருந்து திருவாபரணப் பெட்டி ஊர்வலம் துவங்கியது. மகரசங்கராந்தி தினமான இன்று (ஜனவரி 15) அதிகாலை 02.46 மணிக்கு மகரசங்கரம் பூஜை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து காவடியார் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்யால் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 11.30 மணிக்கு பிறகே பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதிக்கப்பட்டனர். உச்சகால பூஜைக்கு பிறகே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 


மாலை 5.30 மணியளவில் பம்பையை வந்தடையும் திருவாபரணப்பெட்டி, 6 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது. கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி திருவாபரணப் பெட்டியை பெற்று, அதிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன ஆபரணங்களை சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை காட்டினர். தீபாராதனை காட்டப்பட்ட சில நொடிகளில் ஐயப்பன் கோவிலுக்கு எதிரில் உள்ள  பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவமாக சுவாமி ஐயப்பன் காட்சி அளித்தார். இதைக் கண்டு பக்தி பரவசத்தில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டனர்.


பக்தர்களின் சரண கோஷம் விண்ணை பிளக்க சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்கள் செளகரியமாக ஜோதி தரிசனம் செய்வதற்காக 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏரக்குறைய 4 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக சொல்லப்படுகிறது.