யாருக்கு கிடைக்கும் இதெல்லாம்?... கே.ஜே.யேசுதாசிற்காக சபரிமலையில் சிறப்பு பூஜை

Aadmika
Jan 13, 2024,11:08 AM IST

சபரிமலை : பிரபல பின்னணி பாடகரும் கர்நாடக இசை பாடகருமான கே.ஜே.யேசுதாசின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. இது திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் கே.ஜே.யேசுதாசிற்கு அளிக்கப்பட்ட கெளரவமாகும்.


பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஜனவரி 10ம் தேதி அன்று தன்னுடைய 84வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் மலையாள காலண்டர் படி அவருக்கு ஜனவரி 12ம் தேதி தான் பிறந்தநாள். அவர் பிறந்த நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரமும் ஜனவரி 12 அன்று தான் வந்தது. இதனால் கே.ஜே.யேசுதாசின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. ஜனவரி 15 ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளதால், தற்போது சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருந்தாலும் இந்த சமயத்திலும் ஜனவரி 12ம் தேதியன்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டதும், சிறப்பு பூஜை, கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவற்றுடன் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டுள்ளது.




சபரிமலையில் பூஜை செய்யப்பட்ட பிரசாதத்தை கே.ஜே.யேசுதாசிற்கு அனுப்பி வைக்கவும் தேவசம் போர்டு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யேசுதாஸ் தற்போது அமெரிக்காவில் இருந்து வருகிறார். ஒவ்வொரு முறை அமெரிக்கா செல்வதற்கு முன்பும் சபரிமலையில் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது தான் கே.ஜே.யேசுதாசின் வழக்கம். இந்த முறை மண்டல பூஜை துவங்கியது முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் யேசுதாஸ் சபரிமலை வரவில்லை என சொல்லப்படுகிறது.


கே.ஜே.யேசுதாஸ் ஏராளமான ஐயப்பன் பாடல்களை பாடி உள்ளார். ஐயப்பனுக்கு இரவில் நடை அடைக்கப்படும் போது பாடப்படும் ஹரிவராசனம் பாடலையும் கே.ஜே.யேசுதாஸ் பாடி உள்ளார். 1980 கள் துவங்கி தற்போது வரை சபரிமலையில் இரவில் யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடலே ஒலிக்கிறது. 


கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் இணைந்து வழங்கும் ஹரிவராசனம் புரஷ்கரம் விருதினை பெற்ற ஒரே நபர் கே.ஜே.யேசுதாஸ் மட்டும் தான்.