சாமியே சரணம் ஐயப்பா... கார்த்திகை பிறந்தது.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Aadmika
Nov 17, 2023,09:40 AM IST

பந்தனம்திட்டா: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளதைத் தொடர்ந்து ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.


கேரள மாநிலத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற பக்தி ஸ்தலம் சபரிமலை. கார்த்திகை முதல் தேதி என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது சபரிமலைதான். சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.


நவம்பர் 16ஆம் தேதியான நேற்று மாலை நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஹரிவராசனம் நடைபெற்று இரவு நடை அடைக்கப்பட்டது. இன்று காலை 5 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.




டிசம்பர் மாத இறுதி வாரத்தில் மண்டல பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து படி பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் நடை சாத்தப்படும். சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு புத்தாண்டுக்கு முதல் நாள் மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் தொடர்ந்து மகர சங்கராந்தி அதாவது தை மாத பிறப்பு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


சபரிமலையில், வழக்கமாக ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு படி பூஜைகள் முடிந்த பிறகு ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு நடை மீண்டும் அடைக்கப்படும். அதற்கு பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் நடை திறக்கப்படும். இது வழக்கமாக சபரிமலையில் நடக்கும் நடைமுறைதான். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் கார்த்திகை முதல் நாள் முதல் நடை தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும். 48 நாட்கள் இந்த பூஜை தொடர்ந்து நடைபெறும். 


மகர சங்கராந்தி நாளான தை மாத பிறப்பு (அதாவது பொங்கல் தினத்தன்று) மகர ஜோதி தரிசனம் நடைபெறும். அன்றைய தினம் பொன்னம்பலம் மேட்டில் ஐயப்ப சுவாமி ஜோதி ரூபமாக பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம். ஜோதி தரிசனம் முடிந்த பிறகு கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை பூஜைகள் நடைபெறும். அதற்குப் பிறகு மீண்டும் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் பிப்ரவரி மாதம், முதல் தேதியன்று வழக்கமான பூஜைகளுக்காக நடை திறக்கப்படும்.