முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக.. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை..!

Manjula Devi
Feb 28, 2025,03:15 PM IST
சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக  பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் முதல்வரிடம் கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு சார்பில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக  நாட்டில் அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பல்வேறு தொழில் முனையங்களையும் நிறுவி சாதனை படைத்து வருகிறது. அதன்படி, நேற்று மருத்​துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட 2,642 மருத்​துவர்​களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்​டா​லின் வழங்கினார். அந்த வகையில் தற்போது, திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை,  பணி நிரந்தரம் செய்ய  வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 3700 உடற்கல்வி, 3700 ஓவியம், 2 ஆயிரம் கணினிஅறிவியல், 1700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்க்கைகல்வி என மொத்தம் 12 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். தற்போது 12,500 ரூபாய் என்ற குறைந்த தொகுப்பூ ஊதியம் வழங்கப்படுகிறது. 14 ஆண்டாக மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, குடும்ப நல நிதி போன்றவைகூட இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மாற்றுத்திறனாளிகள், விதவை, பெண்கள், ஏழை தினக்கூலி குடும்பங்கள் என சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் தான் இந்த வேலையில் உள்ளார்கள். பலர் 50 வயதை கடந்துவிட்டனர். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட, காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி, தமிழக அரசுப் பணிக்கு ஈர்த்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.