ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது

Su.tha Arivalagan
Aug 20, 2023,02:53 PM IST

மாஸ்கோ: நிலவை ஆய்வு செய்ய  ரஷ்யா அனுப்பி வைத்த விண்கலமான லூனா 25, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கி விட்டது. லூனா 25 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. லூனா 25 விண்கலம் நொறுங்கியதால் ரஷ்யாவின் நிலவுத் திட்டம் தோல்வியில் முடிந்தது.


கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா தனது நிலவுத் திட்டத்தை செயல்படுத்த களம் இறக்கியதுதான் லூனா 25 விண்கலம். இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலமும், லூனா  25 விண்கலமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த நிலையில் லூனா 25 நாளை நிலவில்தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.




ஆனால் நிலவின் வட்டப் பாதையின் கடைசிச் சுற்றை முடிக்கவிருந்த நிலையில் லூனா 25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் லூனா 25 விண்கலமானது நிலவில் விழுந்து நொறுங்கி விட்டது. சரியான திசையில் போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத சுற்றுப் பாதைக்கு விண்கலம் போனதால் அது கட்டுப்பாட்டை இழந்து படு வேகமாக போய் நிலவின் தரையில் விழுந்து நொறுங்கி விட்டது.


ரஷ்ய விண்வெளி நிறுவனமான  ராஸ்கோமாஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியில் நாளை லூனா 25 தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் திட்டம் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது.


ரஷ்யா கடந்த 1957ம் ஆண்டு ஸ்புட்னிக் 1 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியிருந்தது. அதன் பின்னர் 1961ம் ஆண்டு விண்வெளிக்கு முதல் மனிதனை அனுப்பி வைத்த சாதனையைப் படைத்திருந்தது ரஷ்யா. அந்த ஆண்டு யூரி காகரின் விண்வெளியில் நடந்த முதல் மனிதராக புகழ் பெற்றார். அப்போது சோவியத் யூனியனாக ரஷ்யா வியாபித்து வலிமையுடன் திகழ்ந்தது.


கடைசியாக  கடந்த 1976ம் ஆண்டு லூனா 24 விண்கலத்தை ரஷ்யா நிலாவுக்கு அனுப்பியிருந்தது.  அப்போது ரஷ்யாவை பிரஷ்னேவ் ஆண்டு வந்தார். அதன் பின்னர் நிலவுப் பயணத்தை ரஷ்யா மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது அனுப்பப்பட்ட லூனா 25 பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது.


உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு, லூனா 25 ஒரு புது நம்பிக்கையைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.