ஜவ்வாக இழுக்கும் உக்ரைன் போர்.. புடின் அதிருப்தி.. பாதுகாப்பு அமைச்சருக்கு கல்தா!

Su.tha Arivalagan
May 13, 2024,05:46 PM IST

மாஸ்கோ: உக்ரைனுடனான போர் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தனது நாட்டு பாதுகாப்பு அமைச்சரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளாார் அதிபர் விலாடிமிர் புடின்.


தற்போது பாதுகாப்பு அமைச்சராக செர்ஜி ஷோய்கு இருந்து வருகிறார். அவரை ரஷ்ய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவியில் நியமித்துள்ளார் புடின். அதேசமயம், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவரோவ், முப்படை தளபதி வலரி கெரசிமோவ் ஆகியோர் மாற்றப்படவில்லை. அவர்கள் அதே பதவியில் நீடிக்கிறார்கள்.


புதிய பாதுகாப்பு அமைச்சராக ஆண்ட்ரி பெலுசோவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் துணைப் பிரதமர் ஆவார். பொருளாதாராத்தில் நிபுணத்துவும் பெற்றவர். ராணுவம் சாராத தலைவர்.  திட்டமிடுதலில் வல்லவர். இவர் மூலம் சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்தும் திட்டத்தில் புடின் உள்ளாராம்.




2012ம் ஆண்டு முதல் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து வந்தார் ஷோய்கு. இவரை மாற்றியிருப்பது சர்ப்பிரைஸ் ஆக உள்ளது. போர் இழுபறியாக இருந்து வருவதால் புடின் அதிருப்தி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அவர் ஷோய்குவை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


கடந்த 2022ம் ஆம்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷ்யா. விரைவிலேயே போரை முடித்து உக்ரைனை நிர்மூலமாக்கி விடலாம் என்ற திட்டத்துடன் தொடங்கிய போர் இன்று வரை ரஷ்யாவுக்கு எந்த லாபத்தையம் தராமல் நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா பெரும் இழப்புகளை இந்தப் போரில் சந்தித்துள்ளது. பல ஆயிரம் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த அதிரடி மாற்றத்திற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ரஷ்யாவின் நிதி செலவீனத்தில் பெரும் பங்கு ராணுவத்திற்கும், ராணுவ அதிகாரிகளுக்குமே போவதால், மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மிகப் பெரிய போராட்டங்களில் இறங்கக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. அப்படிப்பட்ட நிலை வராமல் தடுக்கும் முகமாகவே புடின் இந்த மாற்றத்தை செய்திருப்பதாக சொல்கிறார்கள்.