காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

Su.tha Arivalagan
Sep 18, 2024,06:41 PM IST

சென்னை: துணை முதல்வராகப் போகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இந்த செய்தி கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பீக்காக பரவுகிறது. பிறகு அப்படியே மங்கிப் போய் விடுகிறது. இதோ இன்றும் கூட அந்த செய்தி பரவியது. ஆனால் அதை சிரித்துக் கொண்டே வதந்தி என்று கூறி விட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.


திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது, மு.க.ஸ்டாலினுக்கு ஒவ்வொரு பொறுப்பாக கொடுத்து வந்தார். ஒவ்வொரு பொறுப்பை அவர் கொடுக்கும் போதும் அதற்கு முன்பாக அதுகுறித்து கட்சிக்குள் பேச்சு வலுத்திருக்கும். அதேசமயம், எந்தப் பொறுப்பையும் கருணாநிதி சீக்கிரம் கொடுத்து விடவில்லை. கொடுக்கவும் மாட்டார். நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்வார். பிறகுதான் பொறுப்பைக் கொடுப்பார். அப்படி நிதானித்து ஒவ்வொரு பொறுப்பாக கொடுத்ததால்தான் இன்று முதல்வர் பதவியிலும், திமுக தலைவராகவும் மு.க.ஸ்டாலின் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். அந்த நிதானமும், பொறுப்பும், காத்திருப்பால் கிடைத்த அனுபவமும் மு.க.ஸ்டாலினை நிறையவே பக்குவப்படுத்தியிருக்கிறது.




இந்த நிலையில் தற்போது திமுக தலைவராகவும் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு ஒவ்வொரு பொறுப்பாக கொடுத்து வருகிறார். ஆனால் ஸ்டாலினுக்குக் கிடைத்தது போல எல்லாமே தாமதமாக கிடைக்காமல், வேகமாகவே கிடைக்கிறது உதயநிதி ஸ்டாலினுக்கு.


முதலில் எம்எல்ஏ பொறுப்பு, பிறகு இளைஞர் அணிச் செயலாளர் பதவி, அடுத்து அமைச்சர் பதவி என வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அந்த வரிசையில் அவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று கட்சிக்குள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சில மாவட்டங்களில் தீர்மானமும் கூட போட்டிருந்தனர். இருப்பினும் இதுதொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்கள் முதல்வரிடம் கேட்டபோது, கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆனால் பழுக்கவில்லை என்று பதிலளித்திருந்தார்.


ஆனாலும் உதயநிதி ஸ்டாலின் குறித்த செய்திகள் தொடர்ந்து அவ்வப்போது பரவியபடிதான் உள்ளது. முதல்வர் அமெரிக்கா போவதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவார் என்று செய்திகள் பரவின. ஆனால் அப்போது எதுவும் நடக்கவில்லை. இந்தப் பின்னணியில் இன்று காலை முதல் இந்த செய்தி மீண்டும் பரவியது. துணை முதல்வராகப் போகிறார் உதயநிதி ஸ்டாலின். முற்பகல் 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது என்று ஒரு செய்தி காட்டுத் தீ போல பரவியது. செய்தியாளர்கள் குரூப்களிலும் கூட இது வேகமாக பரவியது. 


ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்த நிலையில் இந்த செய்தி குறித்து உதயநிதி ஸ்டாலினிடமே செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், முதல்வருக்கு அனைத்து அமைச்சர்களுமே துணையாகத்தான் உள்ளோம் என்று வழக்கம் போல விளக்கினார். மேலும் அவர் கூறுகையில், எந்தப் பதவியாக இருந்தாலும் அது முதல்வரின் உரிமை. அவர்தான் முடிவெடுப்பார். அவர்தான் அறிவிப்பார். அப்படி ஒன்று நடந்தால் முதல்வர்தான் அதை அறிவிப்பார் என்று கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்