மறுமணம் செய்யும் கைம்பெண்களுக்கு ரூ. 2 லட்சம்... சூப்பர் திட்டம் அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

Meenakshi
Mar 06, 2024,03:47 PM IST

ராஞ்சி: மறுமணம் செய்யும் கைம்பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.


ஒரு குடும்பத்தில் மனைவி இறந்து விட்டாள் கணவன் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கமும், அதே போல கணவன் இறந்து விட்டாள் மனைவி என்பவள் உடன்கட்டை ஏறும் வழக்கமும் பழங்காலம் தொட்டு இருந்து வந்தது. இது பெரும்பாலும் வட மாநிலங்களில்தான் அதிகம் இருந்தது. கணவனை இழந்த பெண்கள் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதலுக்கு உடன்கட்டை ஏறுதல் என்று சொல்லப்பட்டது. இந்த வழக்கம் ஒரு சில இடங்களில்  கட்டாயமாக மனைவி உடன்கட்டை தான் ஏற வேண்டும் என்று அந்த பெண்ணை கணவனின் உடல் எறியும் போது தள்ளி விடும் நிலையும் இருந்தது. பல்வேறு போராட்டங்களால் இந்த சமூக அவலம் பின்னர் ஒழிக்கப்பட்டது.




அதேசமயம், கணவனை இழந்த பெண்களை ராசியற்றவள் என்று கூறி ஒதுக்கும் கொடுமையும் இருந்து வந்தது. இந்த நிலையில்  கைம்பெண்கள் மீண்டும் திருமணம் செய்யவும் சமூக அவலம் தடை விதித்தது. இந்த நிலையும் பின்னர் மாறி, கைம்பெண்களும் திருமணம் செய்து கொள்ளலாம் என சட்டமே வந்தது.


மறுமணம் சட்டம் கொண்ட வரப்பட்ட பின்னர் பெண்கள் மறுமணம் செய்வதை சமூகம் ஏற்றது. இவ்வாறாக பெண்களின் நிலை மாற்றம் கண்டு இன்று மறுமணம் செய்யும் பெண்களுக்கு அரசு உதவிகள் வழங்கும் நிலை வந்துள்ளது. இந்நிலையில் 2017ம் ஆண்டு  மத்திய அரசு கைம்பெண் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய நிதியுதவி திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தை ஆண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அரசு நிபந்தனையும் விதித்தது. 


தற்போது  கைம்பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் கண்ணியத்தை உயர்த்தவும், ஜார்க்கண்ட் மாநில அரசு கைம்பெண் மறுமண ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மறுமணம் செய்யும் கைம்பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இத்திட்டம் குறித்து பெண்கள் குழந்தைகள் நலத்துறை செயலாளர் மனோஜ் குமார் கூறுகையில், ஜார்கண்ட் கைம்பெண் மறுமணம் ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையை கண்ணியத்துடன் நடத்த முடியும் என்றார்.