அடித்து நொறுக்கி வெளுத்த ரோஹித் சர்மா.. வந்த வேகத்தில் திரும்பி.. ஏமாற்றிய ஸ்ரேயாஸ் ஐய்யர்!

Su.tha Arivalagan
Nov 19, 2023,03:06 PM IST

அகமதாபாத்: ஆஸ்திரேலியா பந்து வீச்சை தவிடுபொடியாக்கி ரன் குவித்து வந்த ரோஹித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர வைத்து விட்டார். மறுபக்கம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்ரேயாஸ் ஐய்யர் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


ஆனால் இந்தியாவுக்கு அருமையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து ஆஸ்திரேலியாவை சற்று டென்ஷனில் மூழ்கடித்து விட்டுத்தான் ஆட்டமிழந்துள்ளார் ரோஹித் சர்மா என்பது முக்கியமானது.


சுப்மன் கில்லும், ரோஹித் சர்மாவும் இணைந்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். சுப்மன் கில் அமைதியாக வேடிக்கை, பார்க்க ரோஹித் சர்மா பொளந்து கட்டி விட்டார். மிட்சல் ஸ்டார்க், ஹேசல்வுட் என யாரையும் விடவில்லை. எப்படிப் போட்டாலும் அடித்தார் ரோஹித் சர்மா. அவரை தடுக்க முடியாமல் திணறியது ஆஸ்திரேலிய அணி.




இந்த உலகக் கோப்பைத்  தொடரில் பவர் பிளேவில் அதிரடி காட்டி ஆடி வந்துள்ளார் ரோஹித் சர்மா. அதே வேகத்தை இன்றும் அவர் வெளிப்படுத்தினார். பிரமாதமாக ஆடி வந்த ரோஹித் சர்மா துரதிர்ஷ்டவசமாக 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 40 ரன்களுக்கு மேல் எடுத்து அவர் ஆட்டமிழப்பது இது 5வது முறையாகும். சதம் அல்லது அரை சதத்தை மனதில் வைக்காமல் அணியின் ஸ்கோரை மனதில் வைத்து அவர் ஆடி வருவதே இதற்குக் காரணம்.




மறுபக்கம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்ரேயாஸ் ஐய்யர் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.